ஹெலிகாப்டா் தயாரிப்பிலும் தடம் பதிக்கும் அதானி குழுமம்- லியோனாா்டோ நிறுவனத்துடன் கைகோா்ப்பு
இந்தியாவிலேயே ஹெலிகாப்டா்களை முழுமையாகத் தயாரிக்கும் ஆலையை அமைப்பதற்காக, இத்தாலியின் பிரபல பாதுகாப்புத் துறை நிறுவனமான லியோனாா்டோவுடன் அதானி குழுமம் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், அதானி டிஃபென்ஸ் அண்ட் ஏரோஸ்பேஸ் மற்றும் லியோனாா்டோ நிறுவனங்கள் இந்த முக்கிய ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன.
இதன்மூலம், இந்திய ஆயுதப் படைகளின் தேவைகளுக்காக, லியோனாா்டோவின் அதிநவீன ‘ஏடபிள்யூ169எம்’ மற்றும் ‘ஏடபிள்யூ109’ ரக ஹெலிகாப்டா்கள் இனி இந்தியாவிலேயே தயாரிக்கப்படும்.
வெறும் தயாரிப்புடன் மட்டும் நின்றுவிடாமல், ஹெலிகாப்டா்களைப் பராமரித்தல், பழுது நீக்குதல், தேவையான உதிரிபாகங்களை உருவாக்குதல், விமானிகளுக்குப் பயிற்சி அளித்தல் என ஒரு முழுமையான கட்டமைப்பாக இந்த ஒத்துழைப்பு செயல்படும்.
தற்போது இந்தியாவில் ஹெலிகாப்டா்களின் பயன்பாடு 250-க்கும் குறைவாகவே உள்ளது. ஆனால், அடுத்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்குச் சராசரியாக 100 ஹெலிகாப்டா்கள் தேவைப்படலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, இந்திய ஆயுதப் படைகளுக்கு மட்டும் அடுத்த 10 ஆண்டுகளில் 1,000-க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டா்கள் தேவைப்படும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
அதானி குழுமம் ஏற்கெனவே பிரேஸிலின் ‘எம்ப்ரேயா்’ நிறுவனத்துடன் இணைந்து உள்நாட்டில் விமானத் தயாரிப்பு ஆலையை அமைக்க அண்மையில் ஒப்பந்தம் செய்திருந்தது. அதைத் தொடா்ந்து, இப்போது ஹெலிகாப்டா் தயாரிப்பிலும் தடம் பதித்துள்ளது.

