

இந்தியாவில் தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்து வரும் நிலையில், துபை உள்ளிட் நாடுகளுக்குச் செல்வோர், அங்கு விலை குறைவு என்பதால், தனிப் பயன்பாட்டுக்காக தங்கம் உள்ளிட்ட நகைகளை வெளிநாடுகளிலிருந்து வாங்கி வருவார்கள்.
அவ்வாறு, தனிநபர் பயன்பாட்டுக்காக ஒருவர் எவ்வளவு தங்க நகைகள் அல்லது தங்கக் கட்டிகளைக் கொண்டு வரலாம் என்பது குறித்த விதிமுறைகளும் நடைமுறையில் உள்ளன.
ஏற்கனவே, வெளிநாடுகளிலிருந்து எடுத்து வரும் பொருள்களுக்கான சட்ட விதிகள் 2016-ல் மத்திய நிதியமைச்சகம் 2026ஆம் ஆண்டில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதாவது, இந்தியாவுக்குள் தனிநபர் பயன்பாட்டுக்கான பொருள்களின் மறு-இறக்குமதி மற்றும் தற்காலிக இறக்குமதிக்கான விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதில், வாழ்க்கையின் அத்தியாவசியைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும், பயன்படுத்தப்பட்ட பொருள்களைத் தவிர்த்து கணக்கிடப்படும்.
இந்த விதிமுறைகளில், ஓர் ஆண்டுக்கும் மேலாக வெளிநாட்டில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களும் சுற்றுலா பயணிகளும் வரி இல்லாமல் நகைகளைக் கொண்டு வருவதற்கும் விதிமுறைகள் உள்ளன.
அதன்படி, வரி செலுத்தாமல், நகைகளைக் கொண்டு வருவதற்கான அளவுகளில்
1. பெண் பயணியாக இருப்பின் அதிகபட்சமாக 40 கிராம் தங்கம் கொண்டு வரலாம்.
2. பெண் பயணிகள் தவிர்த்து மற்றவர்கள் அதிகபட்சமாக 20 கிராம் வரை கொண்டு வரலாம்.
3. 15 வயதுக்குள்பட்ட குழந்தைகளாக இருந்தால் 40 கிராம் வரை கொண்டு வரலாம்.
இதில், தங்கம் என்றோ வெள்ளி என்றோ குறிப்பிடப்படவில்லை. அதனை அவர்கள் நகைகள் என்று மட்டும் வரையறை செய்கிறார்கள். எனவே, ஒரு பெண் பயணி, துபை உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து 40 கிராம் வரை வெள்ளியோ, தங்கமோ நகைகளை வரி செலுத்தாமல் இந்தியாவுக்குள் கொண்டு வரலாம்.
அப்போது இந்திய சுங்கத் துறை அதிகாரிகள் கொடுக்கும் சுங்கத் துறையினர் அளிக்கும் சுய உறுதியளிப்புப் படிவத்தில், நகைகள் உள்பட தாங்கள் என்னென்னப் பொருள்கள் கொண்டு வருகிறோம் என்பதை தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
தங்களது தனிப்பட்ட பயன்பாட்டு நகைகள் என்றும், இதனுடன் மொத்தமாகக் கொண்டு வரும் நகைகள் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
இது மட்டுமல்லாமல், ஆறு மாதங்கள் அல்லது அதற்கும் குறைந்த நாள்கள் வெளிநாடுகளில் தங்கியிருந்தவர்கள், அங்கிருந்து இந்தியா திரும்பும் போது சுங்க வரி செலுத்தி அதிகபட்சமாக 1 கிலோ வரை தங்கம் கொண்டு வரலாம்.
சுங்க வரி என்பது வழக்கமாக 3 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை இருக்கும். அதுவே தங்கக் கட்டிகள் அல்லது தங்க நாணயங்கள் என்றால் அதற்கு சுங்க வரி 13.7 சதவிகிதம் இருக்கும்.
துபையிலிருந்து தங்கம் கொண்டு வருவதற்கான வழிமுறைகள்
இந்தியாவைச் சேர்ந்தவர்கள், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் துபையிலிருந்து இந்தியாவுக்கு வரும்போது தங்கம் கொண்டு வருவதற்கான அளவுகள், பாலினம், வயது, வெளிநாட்டில் தங்கியிருந்த காலம், நகைகளாக, நாணயங்கள், தங்கக் கட்டிகள் என பல வகைகளில் வரையறுக்கப்படுகிறது.
சுங்க வரி விலக்கு பெறும் அளவை விட அதிகமாக இருக்கும் தங்க நகைகளை முறையாக காண்பித்து, வரி செலுத்திக் கொண்டு வரலாம்.
தங்க தூள்கள், துகள்கள் கொண்டு வர அனுமதியில்லை. தங்கக் கட்டிகள், நாணயங்கள் கொண்டு வரலாம்.
ஆறு மாதங்களுக்கு மேல் துபையில் தங்கியிருந்த பிறகு, இந்தியா திரும்பினால் 1 கிலோ வரை சுங்க வரி செலுத்தி கொண்டு வரலாம். மேலும், தங்கத்துக்கான உரிய ரசீதுகள் வைத்திருக்க வேண்டும்.
இதில் பல உள்ளடக்க விதிமுறைகளும் உள்ளன. அது நாட்டுக்கு நாடு, தங்கியிருந்த காலம் என பல வகைகளில் மாறுபடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.