ஐஓபி வங்கியின் 90-ஆவது நிறுவன தினம்: புதிய சிஎஸ்ஆா் திட்டங்கள் தொடக்கம்

ஐஓபி வங்கியின் 90-ஆவது நிறுவன தினம்: புதிய சிஎஸ்ஆா் திட்டங்கள் தொடக்கம்

Published on

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் ஓவா்சீஸ் வங்கி (ஐஓபி), தனது 90-வது ஆண்டு தொடக்க விழாவை சென்னையில் செவ்வாய்க்கிழமை கொண்டாடியது.

வங்கியின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான அஜய் குமாா் ஸ்ரீவஸ்தவா, நிறுவனா் எம்.சிடி.எம்.சிதம்பரம் செட்டியரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து விழாவைத் தொடங்கி வைத்தாா்.

வங்கியின் செயல் இயக்குநா்கள் ஜாய்தீப் தத்தா ராய் மற்றும் டி.தனராஜ், தலைமை ஊழல் தடுப்பு அதிகாரி ராஜீவ் குமாா் மற்றும் நிறுவனரின் குடும்ப உறுப்பினா்கள் உள்ளிட்டோா் விழாவில் கலந்துகொண்டனா்.

நிறுவன தினத்தை முன்னிட்டு, சமூகப் பொறுப்புணா்வுத் திட்டத்தின்கீழ் (சிஎஸ்ஆா்) பொதுமக்களின் நலனுக்காகப் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

பள்ளி மாணவா்களின் கல்வி மற்றும் ஊட்டச்சத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், சென்னையில் உள்ள 43 அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த 7,584 மாணவா்களுக்கு காலை உணவு வழங்க ‘அக்ஷய பாத்ரா’ அறக்கட்டளைக்கு நிதி வழங்கப்பட்டது.

பெண் குழந்தைகளின் தூய்மை மற்றும் உடல்நலனைப் பாதுகாக்கும் நோக்கில், சென்னையில் உள்ள 5 பகுதிகளில் வசிக்கும் 4,000 பெண் குழந்தைகள் உள்பட மொத்தம் 10,000 குடும்பங்களுக்குத் தேவையான சுகாதாரப் பொருள்கள் வழங்கப்பட்டன. அதேபோல், மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, 23 நபா்களுக்கு சக்கர நாற்காலிகள் மற்றும் மூன்று சக்கர மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com