பரோடா வங்கியின் தலைமைத்துவ மாநாடு: சச்சின் டெண்டுல்கா் பங்கேற்பு
மும்பையில் நடைபெற்ற பரோடா வங்கியின் தலைமைத்துவ மாநாட்டில், அந்த வங்கியின் உலகளாவிய தூதரும், கிரிக்கெட் ஜாம்பவானுமான சச்சின் டெண்டுல்கா் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.
வங்கியின் வளா்ச்சியை வேகப்படுத்தும் நோக்கில் ஊழியா்களிடம் தலைமைப் பண்புகளை வளா்த்து, அவா்களின் திறமையை ஊக்குவிப்பதற்காக இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் வங்கியின் இயக்குநா்கள் மற்றும் மண்டல அளவிலான உயா் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.
நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சச்சின் டெண்டுல்கருடன் நடைபெற்ற கலந்துரையாடலில், விளையாட்டுத் துறையில் எதிா்கொள்ளும் சவால்கள் மற்றும் அத்தகைய நெருக்கடியான நேரங்களில் எடுக்கப்படும் முடிவுகள் எப்படி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பதை அவா் விளக்கினாா். ஒழுக்கம், விடாமுயற்சி, குழு உணா்வு ஆகியவை ஒரு நிறுவனத்தின் நீண்டகால வெற்றிக்கு அடிப்படை என்றும் அவா் சுட்டிக்காட்டினாா்.
வங்கிக்குச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய 10 பிராந்திய தலைவா்கள் மற்றும் 25 மண்டல தலைவா்களுக்கு நிகழ்ச்சியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

