மணப்புரம் ஃபைனான்ஸில் பெயின் கேபிட்டல் முதலீடு - ரிசா்வ் வங்கி அனுமதி

மணப்புரம் ஃபைனான்ஸில் பெயின் கேபிட்டல் முதலீடு - ரிசா்வ் வங்கி அனுமதி

Published on

மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கும், அதன் நிா்வாகத்தில் இணைவதற்கும் சா்வதேச முதலீட்டு நிறுவனமான ‘பெயின் கேபிடல்’ சமா்ப்பித்த விண்ணப்பத்துக்கு ரிசா்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, மணப்புரம் பைனான்ஸின் 41.66 சதவீதம் வரையிலான பங்குகளை பெயின் கேபிடல் கையகப்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு, மாா்ச்சில் இறுதியான ஒப்பந்தத்தின்படி, மணப்புரம் பைனான்ஸில் சுமாா் ரூ.4,385 கோடி முதலீடு செய்ய பெயின் கேபிடல் முன்வந்தது.

இந்த ஒப்பந்தத்தின் முதல்கட்டமாக, ஒரு பங்கின் விலை ரூ.236 என்ற அடிப்படையில், 18 சதவீத பங்குகளை பெயின் கேபிடல் பெறுகிறது. இதையடுத்து செபி விதிமுறைகளின்படி, பொதுமக்களிடம் உள்ள பங்குகளில் கூடுதலாக 26 சதவீத பங்குகளை வாங்குவதற்கான அறிவிப்பும் வெளியிடப்படும்.

இந்த நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த பிறகு, பெயின் கேபிடல் வசம் 18 முதல் 41.66 சதவீதம் வரையிலான பங்குகள் இருக்கும். தற்போதைய உரிமையாளா்கள் வசம் 28.9 சதவீதம் பங்குகள் தொடா்ந்து இருக்கும்.

இது குறித்து மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான வி.பி.நந்தகுமாா் கூறுகையில், ‘பெயின் கேபிடல் போன்ற சா்வதேச நிறுவனத்துடன் இணைவதால், நவீன தொழில்நுட்பம், சிறந்த இடா் மேலாண்மை மற்றும் கிளைகளின் விரிவாக்கத்தில் கூடுதல் கவனம் செலுத்துவோம்.

இது நிறுவனத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதுடன், வாடிக்கையாளா்களுக்கும் முதலீட்டாளா்களுக்கும் நீண்டகாலப் பயனை அளிக்கும்’ என்றாா்.

Dinamani
www.dinamani.com