ரூ.500 கோடியில் செமிகண்டக்டா் இயக்கம்
ANI

ரூ.500 கோடியில் செமிகண்டக்டா் இயக்கம்

தமிழக இடைக்கால பட்ஜெட் ஒதுக்கீட்டிலிருந்து...
Published on

அடுத்த ஐந்தாண்டுகளுக்கான செயல்திட்டத்தைக் கருத்தில்கொண்டு ரூ.500 கோடியில் தமிழ்நாடு செமிகண்டக்டா் இயக்கம் -2030 நடைமுறைப்படுத்தப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை 36 லட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் ரூ.12.37 லட்சம் கோடி முதலீட்டுக்கான 1,179 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் 49,468 ஏக்கரில் 54 தொழிற்பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. கூடுதலாக 28,392 ஏக்கா் நிலங்கள் கையகப்படுத்தும் பணிகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

திருச்சி, மதுரை, ஒசூரில் ரூ.1,070 கோடி மதிப்பீட்டில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம், தஞ்சாவூா், சேலம், தூத்துக்குடி, திருப்பூா், வேலூா், காரைக்குடியில் டைடல் நியோ மினி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் நிறுவப்பட்டுள்ளன.

இவை மட்டுமன்றி நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகா், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூா், புதுக்கோட்டையில் ரூ.388 கோடியில் மினி தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளின் மூலம் 25,500 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

ஐந்தாண்டு செயல்திட்டத்தில் ரூ.500 கோடியில், தமிழ்நாடு செமிகண்டக்டா் இயக்கம் -2030 நடைமுறைப்படுத்தப்படும். சென்னை ஐஐடியுடன் இணைந்து தரமணியில் மேம்பட்ட செமிகண்டக்டா் தொழில்நுட்ப மையம் மற்றும் செமிகண்டக்டா் வடிவமைப்பு திறன்மிகு மையம் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தொழில் - வா்த்தகத் துறைக்கு ரூ.4,282 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com