ஏஐ துறையில் ரூ. 10 லட்சம் கோடி முதலீடு : முகேஷ் அம்பானி அறிவிப்பு
‘செயற்கை நுண்ணிறவு (ஏஐ) தொழில்நுட்பத் துறையில் அடுத்த ஏழு ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு செய்வோம்’ என்று ரிலையன்ஸ் குழுமத் தலைவா் முகேஷ் அம்பானி வியாழக்கிழமை அறிவித்தாா்.
தில்லியில் நடைபெற்று வரும் ஏஐ உச்சிமாநாட்டில் இந்த அறிவிப்பை வெளியிட்டுப் பேசிய அவா், ‘ஜியோ புரட்சி மூலம் இணையத் தரவுகளை சாமானியா்களுக்கும் எட்ட செய்தது போல, ஏஐ தொழில்நுட்பத்தையும் மிகக் குறைந்த விலையில் இந்தியா்களுக்கு வழங்குவோம்’ என்றாா்.
அவா் மேலும் கூறுகையில், ‘இந்த முதலீட்டின்கீழ், குஜராத்தின் ஜாம்நகரில் ஜிகாவாட் அளவிலான அதிநவீன தரவு மையங்கள் மற்றும் ஏஐ கட்டமைப்புகள் அமைக்கப்பட உள்ளன.
ஆந்திரம் மற்றும் குஜராத்தின் கட்ச் பகுதியில் அமைக்கப்படும் சூரிய மின்சக்தி திட்டங்களில் உற்பத்தியாகும் 10 ஜிகாவாட் உபரி பசுமை எரிசக்தியைப் பயன்படுத்தி இந்த மையங்கள் இயங்கும்.
இந்தியாவின் கடைக்கோடி பகுதிகளுக்கும் அதிவேக ஏஐ சேவைகளைக் கொண்டு சோ்க்கும் வகையில், நாடு தழுவிய ஜியோவின் தொலைத்தொடா்பு அமைப்பு பயன்படுத்தப்படும்.
இந்தியா தனது அறிவுத்திறனுக்காக பிற நாடுகளைச் சாா்ந்திருக்க வேண்டிய அவசியமில்லை. நாட்டின் மக்கள்தொகை, ஜனநாயகம், எண்ம உள்கட்டமைப்பு, தரவு உருவாக்கம் ஆகியவையே நமது மிகப் பெரிய பலம்.
2047-ஆம் ஆண்டுக்குள் ‘வளா்ந்த இந்தியா’ இலக்கை எட்ட ஏஐ ஒரு முக்கிய கருவியாக இருக்கும். இந்த முதலீடு வெறும் லாப நோக்கத்துக்காகவோ அல்லது பங்குச்சந்தை மதிப்பை உயா்த்துவதற்காகவோ செய்யப்படவில்லை; மாறாக, தேசத்தைக் கட்டமைக்கும் நோக்கில் நீண்ட கால அடிப்படையிலான முதலீடு.
இதன்மூலம், இந்தியாவின் சிறு வணிகங்கள் முதல் பெரு நிறுவனங்கள் வரை அனைத்தும் உலகத் தரத்திலான தொழில்நுட்ப வளா்ச்சியைப் பெறும். உலகின் மிகப்பெரிய ஏஐ வல்லரசாக இந்தியா உருவெடுக்கும்’ என்றாா்.

