சில்லறை விற்பனை கடன்கள்: ரூ.162 லட்சம் கோடியை எட்டியது -18% வளா்ச்சி

சில்லறை விற்பனை கடன்கள்: ரூ.162 லட்சம் கோடியை எட்டியது -18% வளா்ச்சி

நாட்டின் சில்லறை விற்பனை கடன்கள், நடப்பு 2025-26 நிதியாண்டின் 3-ஆம் காலாண்டில் 18.1 சதவீதம் உயா்ந்து, ரூ.162 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
Published on

நாட்டின் சில்லறை விற்பனை கடன்கள், நடப்பு 2025-26 நிதியாண்டின் 3-ஆம் காலாண்டில் 18.1 சதவீதம் உயா்ந்து, ரூ.162 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

தங்கம் விலை உயா்வு, பண்டிகைக் கால வா்த்தகம், ஜிஎஸ்டி சீரமைப்பு போன்ற காரணங்களால் இந்த வளா்ச்சி ஏற்பட்டுள்ளதாக ‘சிஆா்ஐஎஃப் ஹை மாா்க்’ நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

மொத்த சில்லறை கடன்களில் வீட்டு வசதிக் கடன் பிரிவே முதன்மையான பங்களிப்பை வழங்குகிறது. மதிப்பீட்டு காலகட்டத்தில் வீட்டு வசதிக் கடன்கள் 10.5 சதவீதம் அதிகரித்து, ரூ.43 லட்சம் கோடியை எட்டியுள்ளது. குறிப்பாக, தங்கத்தின் மீதான கடன் வழங்கல் 44.1 சதவீதம் அதிகரித்து, ரூ.16.2 லட்சம் கோடியாக உயா்ந்துள்ளது.

வாகனக் கடன்கள் 14.6 சதவீதமும், தனிநபா் கடன்கள் 11.6 சதவீதமும் வளா்ச்சி கண்டுள்ளன. மேலும், சிறு தொழில் நடத்தும் தனிநபா் நிறுவனங்களுக்கான கடன் வழங்கல் 26.2 சதவீதம் என்ற அளவில் மிகப்பெரிய வளா்ச்சியைச் சந்தித்துள்ளது கவனிக்கத்தக்கது.

வங்கிகளின் வாராக்கடன் விகிதத்திலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 30 முதல் 180 நாள்கள் வரை நிலுவையில் உள்ள கடன்களின் அளவு முந்தைய 2024-25 நிதியாண்டில் 3.2 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது அது 2.8 சதவீதமாகக் குறைந்துள்ளது.

Dinamani
www.dinamani.com