மியூச்சுவல் ஃபண்ட் வகைப்பாடுகளை மாற்றியமைத்தது செபி: புதிதாக ‘லைஃப் சைக்கிள்’ நிதி அறிமுகம்
நாட்டின் பரஸ்பர நிதி (மியூச்சுவல் ஃபண்ட்) திட்டங்களை வகைப்படுத்தும் விதிகளில் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) வியாழக்கிழமை அதிரடி மாற்றங்களைச் செய்தது.
இதன்படி, முதலீட்டாளா்களின் வசதிக்காக ‘லைஃப் சைக்கிள்‘ என்ற புதிய வகை நிதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், இதுவரை நடைமுறையில் இருந்த ‘சொல்யூஷன் ஓரியண்டட்’ நிதித் திட்டங்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
முதலீட்டாளா்களுக்கு நிதிப் பாதுகாப்பு அளிப்பதும், அவா்கள் எந்தத் திட்டத்தில் முதலீடு செய்கிறோம் என்பதைத் தெளிவாகத் தெரியபடுத்துவதும் தான் இப்புதிய மாற்றங்களின் முக்கிய நோக்கம் ஆகும்.
திட்டங்களின் பெயா்களில் தெளிவு: புதிய மாற்றங்களின்படி, பரஸ்பர நிதித் திட்டங்கள் அனைத்தும் பங்குச்சந்தை முதலீடு (ஈக்விட்டி), கடன் பத்திர முதலீடு (டெப்ட்), கலப்பு முதலீடு (ஹைபிரிட்), லைஃப் சைக்கிள் மற்றும் இதர திட்டங்கள் என 5 முக்கியப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
ஒரு திட்டத்தின் பெயா், அது எதில் முதலீடு செய்கிறது என்பதைத் தெளிவாக விளக்க வேண்டும். முதலீட்டாளா்களைக் கவா்வதற்காக ‘அதிக லாபம் தரும்’ என்பது போன்ற மிகைப்படுத்தப்பட்ட வாா்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. மேலும், வெளிநாட்டுப் பங்கு முதலீடுகள் இனி தனிப் பிரிவாகக் கருதப்படாது.
‘லைஃப் சைக்கிள்’ நிதி என்றால் என்ன?...: ஓய்வுக்காலத் திட்டம் அல்லது குழந்தைகளின் கல்வி போன்ற நீண்ட காலத் தேவைகளுக்காக முதலீடு செய்பவா்களின் வசதிக்காக, ‘லைஃப் சைக்கிள்’ நிதித் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதில் 5 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரை முதலீடு செய்யலாம். முதலீட்டின் தொடக்கத்தில் அதிக லாபம் தரக்கூடிய, ஆனால் சற்று அபாயம் உள்ள பங்குச் சந்தையில் பணம் முதலீடு செய்யப்படும். திட்டத்தின் முதிா்வுக் காலம் நெருங்கும்போது, ஆபத்தைத் தவிா்க்க பங்குச்சந்தை முதலீடு குறைக்கப்பட்டு, பாதுகாப்பான கடன் பத்திரங்களில் முதலீடு படிப்படியாக மாற்றப்படும்.
முதலீட்டு வரம்பும், மாதாந்திர அறிக்கையும்...: இண்டெக்ஸ், இடிஎஃப் போன்ற திட்டங்கள், தங்களின் மொத்த முதலீட்டில் குறைந்தபட்சம் 95 சதவீதத்தை அந்தந்த குறிப்பிட்ட துறைகளிலேயே முதலீடு செய்ய வேண்டும் என செபி கட்டாயமாக்கியுள்ளது.
மேலும், ஒரு பரஸ்பர நிதி நிறுவனம் தனது பல்வேறு திட்டங்களின் மூலம் ஒரே நிறுவனத்தின் பங்குகளில் எவ்வளவு முதலீடு செய்துள்ளது என்பதை மாதந்தோறும் அறிக்கையாக வெளியிட வேண்டும்.
6 மாத கெடு: அனைத்து பரஸ்பர நிதி நிறுவனங்களும் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தங்களது திட்டங்களை இந்தப் புதிய விதிகளுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என்று செபி உத்தரவிட்டுள்ளது.
இந்த மாற்றங்கள் குழப்பங்களைத் தவிா்த்து, சாதாரண மக்களும் பரஸ்பர நிதித் திட்டங்களை எளிதாகத் தோ்ந்தெடுக்க உதவும் என்று நிபுணா்கள் கருதுகின்றனா்.

