தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது குடுமியான்மலை. இது ஒரு சிற்றூர் ஆகும். பழங்கால வரலாறுகளை அறிந்து கொள்ளும் வகையில் தற்போதும் கண் முன் இருக்கும் சாட்சியாக விளங்கும் அமைப்புகளில் குடுமியான்மலையும் ஒன்று.
புதுக்கோட்டையில் இருந்து விராலி மலை வழியாக திருச்சிக்குச் செல்லும் சாலையில் 20 கி.மீ. தொலைவில் குடுமியான்மலை உள்ளது.
இந்த குடுமியான்மலை முந்தைய காலத்தில் திருநிலக்குன்றம் மற்றும் திருநலக்குன்றம் என்றும் அழைக்கப்பட்டது. பிறகு சிகாநல்லூர் என்று பெயர் வழங்கப்பட்டு தற்போது குடுமியான்மலை என அழைக்கப்படுகிறது.
நடுவில் ஒரு மலைக்குன்று அமைந்திருக்க அதனை சுற்றி இந்த ஊர் அமைந்துள்ளது. அந்த குன்றின் கிழக்குப் பகுதி அடிவாரத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற குடுமியான்மலை கோயில் அமைந்துள்ளது. இது ஒரு கட்டுமானக் கோயிலாகும். குன்றின் கிழக்குச் சரிவில் இருப்பது குடைவரைக் கோயில். இங்குள்ள இசைக் கல்வெட்டுகளும் காணச் சிறந்தவையாகும்.
மேலும், எங்கும் சிலை மயமாகக் காட்சி தரும் சிகாநாதசுவாமி கோயிலும் உள்ளது.
குடுமியான்மலை குடுமிநாதர் கோவிலும் அதன் பின்புறம் உள்ள குடைவரையும் மிகச் சிறப்பு வாய்ந்தவை. இங்குள்ள இசைக் கல்வெட்டுகள் இந்திய இசை வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. குடுமியான்மலையில் சுமார் 120 கல்வெட்டுகள் உள்ளன. ஒரே ஊரில் இவ்வளவு கல்வெட்டுகள் காணக்கிடைப்பது அரிது என்றே சொல்லலாம்.
இந்த கல்வெட்டுகள் அனைத்தும் இசை குறித்தும், குடுமியான்மலை மற்றும் அதனை சுற்றியுள்ள ஊர்களைப் பற்றியும் அறிய உதவுகின்றன. இந்த கல்வெட்டுகளை படிப்பதன் மூலம் ஏழு மற்றும் எட்டாம் நூற்றாண்டு காலத்து தகவல்களை அறிந்து கொள்ள இயல்கிறது.
அதோடு, பாறையைக் குடைந்து கட்டப்பட்ட இந்த சிவாலயம் குடைவரைக் கோயில்களில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இங்குள்ள கோயிலின் ஆயிரம் கால் மண்டபமும் புகழ் பெற்றது.
குடைவரையில் உள்ள ஈசன் திருமூலட்டானத்து எம்பெருமான் என்று அழைக்கப்படுகிறார்.
பாறையில் செதுக்கப்பட்டிருக்கும் விநாயகர் சிற்பம் சிறப்பாக உள்ளது. ஒரு கருவறையும், முன் மண்டபமும் கொண்ட இந்த குடைவரை கோயிலில் உள்ள துவாரபாலகர் அழகின் அம்சமாகக் காட்சி அளிக்கிறது.
வெளியே வந்தால் அங்கும் ஒரு விநாயகர் சிற்பமும், இசைக் கல்வெட்டுகளும் காணக்கிடைக்கின்றன.
குடுமியான் மலை எனப்படும் குன்றின் மீது ஏறினோம். குடுமியான் மலையில் 63 நாயன்மார்களின் சிற்பங்கள் மிக அழகாக செதுக்கப்பட்டுள்ளது. அதன் நடுவே சிவன் பார்வதி, காளை மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கின்றனர். இந்த குன்றின் மீது அமைந்துள்ள குகை, கற்கால மனிதர்களின் இருப்பிடமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இயற்கை அழகின் ரகசியத்தையும், சிற்பங்களின் அழகையும், இசைக் கல்வெட்டுகளையும் காண விரும்புவோருக்கு ஏற்ற இடமாக குடுமியான்மலை அமைந்துள்ளது.
சுற்றுலாவாக மட்டும் அல்லாமல், நமது கலாச்சாரத்தின் ஆழத்தையும் இவ்விடம் அமையும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.