மாமல்லபுரம் கடற்கரையில் அகற்றப்படாத குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளால் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
கடந்த 11, 12 ஆகிய தேதிகளில் மாசி மகத் திருவிழாவையொட்டி, மாமல்லபுரம் கடற்கைரயில் பெளர்ணமி நிலவில் பழங்குடி இருளர் சமுதாய மக்கள் தங்களது குலதெய்வமான கன்னியம்மனுக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர்.
அப்போது, கடற்கரையில் கூடி ஆங்காங்கே மண்ணாலும், சேலைகளாலும் சிறு சிறு குடில்கள் அமைத்து, தங்கள் குடும்பத்தினருடன் தங்கி, உணவு சமைத்து கன்னியம்மனை வழிபட்டனர். அப்போது தங்களது உறவுமுறைக்குள் திருமணம், நிச்சயதார்த்தம் போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தினர். இதில், தமிழகத்தில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், அவர்கள் அமைத்த குடில்கள், உணவு சமைத்தப் பொருள்கள், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை கடற்கரையிலேயே விட்டுவிட்டுச் சென்றனர். விழா முடிந்து ஒரு வாரம் ஆகும் நிலையில், இதுவரை குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்படாமல் இருப்பதால் கடற்கரை பகுதியில் துர்நாற்றும் வீசுகிறது. மேலும், இந்தக் கழிவுகள் கடலில் கலப்பதால் கடல் நீரும் பாழாகும் நிலை உள்ளது.
கடற்கரைக்கு வரும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் நடக்க முடியாமல், முகம் சுளித்தபடி செல்கின்றனர்.
எனவே, மாமல்லபுரம் பேரூராட்சி நிர்வாகம் கடற்கரையில் உள்ள குப்பை, பிளாஸ்டிக் கழிவுகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.