
சமாஜ்வாதி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, "ராஷ்ட்ரீய லோக் மஞ்ச்' என்ற கட்சியை சில காலம் நடத்திய அமர்சிங் பின்னர் அதை "ராஷ்ட்ரீய லோக் தளம்' கட்சியில் இணைத்தார். கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசத்தின் ஃபதேபூர்சிக்ரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பிறகு, தீவிர அரசியலில் இருந்து விலகிஇருந்தார். இந்த நிலையில், மீண்டும் சமாஜவாதி கட்சியில் அமர்சிங் சேருவார் என்ற தகவல் அந்தக் கட்சியில் உலவத் தொடங்கியுள்ளது.
முந்தைய காலங்களிலும் இந்தத் தகவல் வெளியான போது, அதை முலாயமின் மகனும் உத்தர பிரதேச முதல்வருமான அகிலேஷ் யாதவும், மூத்த அமைச்சரான ஆசம் கானும் மறுத்தனர். இவர்களின் எதிர்ப்புகளை மீறி, கட்சியின் பொது மேடைகளில் "எனது இதயத்தில் நீங்காமல் இருப்பவர் அமர் சிங்' என்று வெளிப்படையாகவே முலாயம் பேசி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, உத்தரபிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு அமர் சிங்கை தேர்வு செய்ய முதல்வர் அகிலேஷிடம் முலாயம் விருப்பம் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு, நாடாளுமன்ற மைய மண்டபத்தில் முலாயமும் அமர் சிங்கும் சந்தித்தனர். அப்போது, "சமாஜவாதி கட்சியில் எனது மறுபிரவேசம் "தந்தை-மகன்' இடையிலான உறவைக் கெடுத்துவிடக் கூடாது' என்று அமர்சிங் கூறிய போது, "அந்தக் கவலை உங்களுக்கு வேண்டாம்; மீண்டும் இந்த மைய மண்டபத்தில் உங்களை மாநிலங்களவை உறுப்பினராகச் சந்திக்கிறேன்' எனக் கூறிவிட்டு முலாயம் சென்றார். இதனால், அமர் சிங் நெகிழ்ச்சியடைந்து கண்ணீர்விட்டார். அமர்சிங் வருவதால் கட்சியில் மீண்டும் நடிகை ஜெயபிரதாவும் வருவார் என்கிறது சமாஜ்வாதி கட்சி வட்டாரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.