
சட்டப்பேரவைத் தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் போட்டியிட திமுக திட்டமிட்டுள்ளது. அதற்கான காய் நகர்த்துதலையும் தொடங்கிவிட்டது.
பொதுவாக, சட்டப்பேரவைத் தேர்தலில் நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தமட்டில், அதிமுக கூட்டணியாக இருந்தாலும், திமுக கூட்டணியாக இருந்தாலும் உதகை தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டுவிடும். குன்னூர், கூடலூர் தொகுதிகளில் மட்டுமே பிற கட்சிகள் போட்டியிடும். ஆனால், கடந்த முறை உதகை தொகுதியில் அதிமுக போட்டியிட்டு வெற்றி பெற்றது. குன்னூர், கூடலூர் தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது.
மாவட்டத் தலைமையகமாக உள்ள உதகையில் திமுக கண்டிப்பாகப் போட்டியிட வேண்டும் என்பது அந்தக் கட்சியினரின் நீண்டகால விருப்பமாகும். இதை
பகிரங்கமாகவே பல முறை தெரிவித்துள்ளனர். எனவே, இந்தத் தேர்தலில் கடந்த முறை வெற்றி பெற்ற குன்னூர், கூடலூர் தொகுதிகளோடு, மாவட்டத்தின் தலைமையிடமான உதகை தொகுதியிலும் போட்டியிடுவது எனத் தீர்மானித்து, திமுகவினர் அதற்கான ஏற்பாடுகளையும் செய்து
வருகின்றனர்.
ஆனால், கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி இதற்கு முரண்டு பிடிக்குமானால் அந்தக் கட்சிக்கு கூடலூர் தொகுதியை ஒதுக்குவதென திமுகவினர் தீர்மானித்துள்ளனர். இதற்கு திமுக பொருளாளர் ஸ்டாலினும் பச்சைக்கொடி காட்டிவிட்டாராம். அதனால், உதகை, குன்னூர் தொகுதிகளைக் குறிவைத்து திமுகவினர் இப்போதே களத்தில் இறங்கியுள்ளனர்.
தாயகம் திரும்பிய தமிழர்களும், தோட்டத் தொழிலாளர்களும் அதிக அளவில் உள்ள கூடலூர் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் கட்சி விரும்பாவிட்டால், அந்தத் தொகுதியிலும் திமுகவே போட்டியிடலாம் எனவும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் மாவட்ட நிர்வாகிகளுக்கு கட்சித் தலைமை தெரிவித்துள்ளதாம். அதனால், இந்தத் தொகுதியையும் குறி வைத்தே திமுகவினர் முன்னேற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
உதகை, குன்னூர். கூடலூர் ஆகிய 3 தொகுதிகளிலும் அதிமுகவும் போட்டியிடத் தயாராகி வருகிறது. எனவே, இந்த 3 தொகுதிகளிலும் அதிமுக, திமுக இடையே நேரடிப் போட்டிக்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
-ஏ.பேட்ரிக்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.