தமிழ்நாட்டிலும் கேரளாவைப் போன்றே சமுதாய மாற்றம் கொண்டுவரும் ஆன்மிக அருளாளர்களுக்குக் குறைவில்லை. ஐயா வைகுண்டர், சுவாமி சகஜானந்தர், காவிய கண்ட கணபதி, மதுரை பிள்ளை, ரெட்டைமலை ஸ்ரீனிவாசன், சுவாமி சித்பவானந்தர் ஆகியோர் ஆன்மிக - சமுதாய மறுமலர்ச்சிக்கும் மாற்றத்துக்கும் உழைத்த மகான்கள், வள்ளல்கள். துரதிர்ஷ்டவசமாக, நாம் அவர்களை மறந்துவிட்டோம். அதற்குப் பதிலாக, இனவாதக் கோட்பாடுகளின் அடிப்படையில் சமூக மாற்றத்தையும் சமூக சீர்திருத்தத்தையும் வெறும் பிராமண எதிர்ப்பாகக் குறுக்கிவிட்டோம். நாசிகளின் யூத வெறுப்பு மனநிலையை ஒத்த ஒரு கோட்பாட்டால், சமுதாய மாற்றத்தை உருவாக்க முடியாது.