தமிழ்நாட்டில் இஸ்லாமிய மறைஞான மரபு ஆழமாக வேரூன்றி உள்ளது. பாரத யோக – சித்தாந்த – வேதாந்த மரபுகளை உள்வாங்கியும் உறவாடியும் உரையாடியும் அது நம் பண்பாட்டில் இன்றியமையாத ஒரு அங்கமாகியுள்ளது. குணங்குடி மஸ்தான், தக்கலை பீரப்பா என்கிற ஞானி என இம்மரபுக்கு நீண்ட பரந்த வரலாறு உண்டு. இடதுசாரிகளில், கவிஞர் ரசூல் போன்ற சிலர் இம்மரபுகளை கவனப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், பொதுவாக இடதுசாரி வரலாற்றுப் பார்வையால் இம்மரபுகளின் உள்கிடப்பை, ஆன்மிகத்தைப் புரிந்துகொள்ளவோ ஏற்கவோ இயலாது. எனவே, இயக்க ரீதியாக செயல்படும்போது, இடதுசாரி அமைப்புகள் இயல்பாக வகாபிய சக்திகளுடனோ அல்லது இஸ்லாமிய அடிப்படைவாத சக்திகளையோ தம் தோழமைகளாகக் கண்டடைகின்றன. உதாரணமாக, மேலப்பாளையத்தில் பர்தாவுக்குக் கட்டுப்படாத இஸ்லாமியப் பெண்கள், அடிப்படைவாத அமைப்புகளால் கொல்லப்பட்டனர். தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உள்ளூர் பிரமுகர், இதற்குக் காரணம் இந்திய அரசியலமைப்பில் ‘ஒழுக்கமில்லாத பெண்களை’ தண்டிக்க இடமில்லாததே எனக் கூறினார். ஆனால், தமுமுக நடத்திய டெல்லிப் பேரணியில் இடதுசாரிகள் கலந்துகொண்டார்கள்.