உயிர் என்றால் என்ன என்கிற கேள்விக்கான ஆராய்ச்சியில், நாம் அணுக்கள் அளவுக்குச் சென்று நுணுகி ஆராயும்போது, அங்கே உயிரற்ற பருப்பொருட்களைத் தவிர வேறெதையும் எதிர்பார்க்க முடியாது. இப்பிரச்னையில் நாம் நினைவில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், இயற்பியல் ஆராய்ச்சியின் தன்மையும் உயிரியல் ஆராய்ச்சியின் தன்மையும் ஒன்றைப்போல மற்றது இல்லை. ஏனெனில், நாம் ஆராய்ந்தறிய முற்படும் உயிரினை உயிருடன் வைத்திருக்க வேண்டியதென்பதே நம்மைக் கட்டுப்படுத்தும் ஒரு விஷயமாகிவிடுகிறது. இயற்பியலில் இந்தப் பிரச்னை இல்லை. ஆக, நாம் ஒரு விலங்கின் உறுப்பு ஒன்றின் உயிர் செயல்பாட்டை அதன் அணு அளவினில் அறிய, அதனை கொன்றே ஆக வேண்டும். (இதன் விளைவாக), உயிர்களின் மீது நாம் நடத்தும் ஆராய்ச்சிகள் அனைத்துமே ஒருவித நிச்சயமற்ற தன்மையைக் கொண்டே இருக்கின்றன. (மாறாக), நாம் ஆராயும் உயிருக்கு அளிக்கும் மிகக் குறைந்த சுதந்தரமும் அவ்வுயிர் தன் அறுதி ரகசியத்தை நம் அறிதலில் இருந்து மறைக்கப் போதுமானதாகிவிடுகிறது.