கண்ணை நம்பாதே! இணையம் ஏமாற்றும்

இணைய ஆற்றலின் மீது அபார நம்பிக்கை கொண்டவன் நான். இணையத்தின் ஆக்கபூர்வமான பயன்பாடு பற்றியும் அதன் வீச்சு பற்றியும் பதிவு செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இணையம்
Updated on
4 min read


ணைய ஆற்றலின் மீது அபார நம்பிக்கை கொண்டவன் நான். இணையத்தின் ஆக்கபூர்வமான பயன்பாடு பற்றியும் அதன் வீச்சு பற்றியும் பதிவு செய்ய வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன. இணையம் பயன்படும் விதம் பற்றியும் எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால் இணையத்தில் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும். மோசடி வலைகளும் மால்வேர்களும் இணையத்தில் அதிகம் என்பது மட்டும் அல்ல, கண்ணால் காண்பதும் பொய் என உணர்த்தும் தருணங்களும் உண்டு. இவை பற்றிய எச்சரிக்கைதான் இந்தப் பதிவு.

இணையம் தகவல் சுரங்கம்தான். தேடு பொறிகள், கேட்ட தகவல்களைக் கொண்டு வந்து கொட்டுகின்றன. செய்திகளை தெரிந்து கொள்ள எண்ணற்ற தளங்கள் இருக்கின்றன. இவை தவிர ஃபேஸ்புக் வாயிலாகவும் குறும்பதிவு சேவையான ட்விட்டர் மூலமும் செய்திகள் வந்தடைகின்றன. திடீரென பார்த்தால் வைரலாகப் பரவி ஒரு விஷயம் கவனத்தை ஈர்க்கும். அது அருமையான வீடியோவாக இருக்கலாம். நல்ல கட்டுரையாக இருக்கலாம்.

இப்படி இணையத்தில் நல்ல விஷயங்கள் கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கின்றன. ஆனால் இவற்றுக்கு நடுவே இணையவாசிகள் கண்களில் மண்ணைத்தூவும் விஷயங்களும் இணையத்தில் உலா வரவே செய்கின்றன. இதற்கு அப்டேட்டான உதாரணம் தேவை என்றால் ஈராக்கில் அன்மையில் நடைபெற்ற போரை சொல்லலாம்.

நடக்காத யுத்தம்

இது நடைபெற்ற போர் அல்ல; நடைபெற்றதாக நம்ப வைக்கப்பட்ட போர். இஸ்லாமிக் ஸ்டேட் மற்றும் அதன் எதிர்ப்பாளர்கள் என இருதரப்பினரையும் ஏமாற வைத்த, ஆனால் உண்மையில் நிகழாத இந்தப் போர் பற்றி பிபிசி தளம் விரிவான செய்தி வெளியிட்டிருக்கிறது.

லண்டன் மனிதர் ஒருவரால், சில குறும்பதிவுகளால் உண்டாக்கப்பட்ட போலி யுத்தம்...! இப்படி தான் பிபிசி கட்டுரை துவங்குகிறது.

ஈராக் தான் இப்போது யுத்த பூமியாக இருக்கிறது அல்லவா? அங்கு இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகளும் அரசுப் படைகள் மற்றும் ஆதரவுப் படைகள் மோதிக் கொண்டிருக்கின்றன. களத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றிய விவரங்கள் ட்விட்டரில் குறும்பதிவுகளாக வெளியாவதும் உண்டு. கள நிலவரத்தைக் கச்சிதமாக படம் பிடித்துக்காட்டும் டிவிட்டர் கணக்குகளும் இருக்கின்றன.

அதனால்தான் இஸ்லாமிக் ஸ்டேட் தீவிரவாதிகள் மற்றும் அரசுப் படைகள் இடையே ஏற்பட்ட சண்டை தொடர்பான தகவல் குறும்பதிவாக வெளியானபோது உடனடியாக கவனத்தை ஈர்த்தது.

இந்தச் செய்தியை அடுத்து, ஷிச்வா பகுதி மீண்டதைத் தொடர்ந்து பெரிய அளவில் கொண்டாட்டம் வெடித்ததாக குறும்பதிவு வெளியானது.

10,000 அகதிகள் ஷிச்வாவில் இருந்து கர்பாலாவில் தஞ்சம் அடைந்ததாக அடுத்தக் குறும்பதிவு தெரிவித்தது. அண்டை நாடுகளும் யுத்ததில் பங்கேற்பதாக வதந்திகள் உலா வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தன.

இன்னொரு குறும்பதிவோ ஈராக் எல்லையில் சவுதி படைகள் குவிக்கப்பட வேண்டும் என அலறியது.

அலுப்பினால் ஆரம்பம்

மற்றவர்களுக்கு எப்படியோ ஈராக் நிலவரத்தை கவனித்து வருபவர்களை இந்தக் குறும்பதிவுகள் பரபரப்பில் ஆழ்த்தின. மேலும் என்ன நடக்கிறது என தெரிந்து கொள்ள துடித்தனர். ஆனால் இப்படி ஒரு சண்டை நடக்கவே இல்லை. இவை எல்லாமே லண்டனில் வசிக்கும் ஈராக்கியரான அகமது அல் முகமது என்பவர் மனத்தில் உதித்தவையாகும். முகமது, @IraqSurveys எனும் ட்விட்டர் பக்கத்தை பராமரித்து வருகிறார். பொதுவாக ஈராக்கில் நடக்கும் விஷயங்களை இணையத்தில் இருந்து திரட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொள்வார்.

ஆனால் ஒரு நாள் மிகுந்த அலுப்புக்கு இலக்கான நிலையில், குறும்பதிவால் உற்சாகம் கொள்வதற்காக ஷிச்வா பகுதியில் இஸ்லாமிக் ஸ்டேட் பின்வாங்குகிறது என ஒரு செய்தியை ட்விட்டரில் வெளியிட்டார். இதற்குப் பொருத்தமாக போர்க்கள காட்சிகளையும் போட்டோஷாப் செய்து வெளியிட்டார்.

அவர் விளையாட்டாகத்தான் இவ்வாறு செய்தார். ஆனால் சற்றும் எதிர்பாராத  வகையில் இந்தச் செய்தி இணையத்தில் உலா வரத் துவங்கியது. அதுவும் எப்படி தெரியுமா? கண், காது, மூக்கு பொருத்தப்பட்டு! ஒரு பயனாளி இந்தப் போருக்கான வரைபடத்தை உருவாக்கி இணைத்திருந்தார். விளைவு, ஈராக்கில் இந்தச் செய்தி பரபரப்பாக பேசப்பட்டு சவுதி மீது இஸ்லாமிக் ஸ்டேட் பதிலடித் தாக்குதல் நடத்த துடிப்பதாகவும் பேசப்பட்டது.

இல்லாத நகரம்

தனது விளையாட்டு விபரீதமாக மாறுவதை உணர்ந்த முகமது, இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்தச் செய்தி பற்றிய உண்மையை வெளியிட்டார். ஆனால் ஏன் இப்படி ஒரு பொய் செய்தியை பரப்ப முயல வேண்டும்? இந்தக் கேள்விக்கு முகமது, நான் என்ன செய்யட்டும், ஷிச்வா எனும் இடமே கிடையாது, இந்தச் சொல்லுக்கு ஈராக் மொழியில் சீஸ் பிளேடர் என்று அர்த்தம். இதைப் பார்த்தவுடன் பொய் தகவல் என்பதை உணர்ந்து கொண்டிருக்க வேண்டாமா? என கேட்கிறார்.

முகமது தனது செயலுக்காக வருத்தப்படாமல் இருக்கலாம். ஆனால் விஷயம் என்ன என்றால் இணையத்தில் விளையாட்டு நோக்கில் வெளியிடப்படும் தகவல்கள்கூட சமயங்களில் உண்மைச் செய்தி என நம்ப வைத்து ஏமாற்றி விடுகின்றன என்பதுதான்.

ட்விட்டரில் இதற்கு முன்னரே இப்படி பல குளறுபடிகள் அரங்கேறி இருக்கின்றன. அதிலும் குறிப்பாக பிரபல நட்சத்திரங்கள் மரணம் அடைந்துவிட்டதாக ட்விட்டர் குறும்பதிவுகள் மூலம் பலமுறை செய்தி பரவியிருக்கின்றன. ஒருமுறை ஹாலிவுட் நட்சத்திரம் ஸ்குவாஸ்நேகர் பனிச்சறுக்கு விபத்தில் இறந்ததாக தகவல் வெளியாகி பரவி பின்னர் அடங்கியது. தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா மரணம் அடைந்துவிட்டதாகவும் அவர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டபோது பொய்த்தகவல் பரவியது. இப்படி பல உதாரணங்களைச் சொல்லலாம்.

ரிட்வீட் செய்யும் முன்...

இந்தப் பொய்ச்செய்திகளின் ஊற்றுக்கண் வெவ்வேறாக இருந்தாலும் அவை பரவிய விதம் ஒன்றாகவே இருக்கிறது. செய்தியைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வம்தான் அது. ட்விட்டரில் ஒரு தகவலைப் பார்த்ததுமே அதை உடனே தனது நட்பு வட்டத்தில் பகிரும் ஆர்வத்துடன் பலரும் அதை மறு குறும்பதிவிடுகின்றனர். அதாவது ரிட்வீட் செய்கின்றனர். அதைப் பார்ப்பவர்கள் மேலும் ரிட்வீட் செய்ய பொய்ச்செய்தி வைரலாகப் பரவுகிறது. பல நேரங்களில் ஊடகங்களேகூட இந்தத் தவறைச் செய்திருக்கின்றன.

தகவல்களைப் பகிர்ந்து கொள்ள துடிப்பதில் தவறில்லைதான். ஆனால் ரிட்விட் செய்யும் முன் ஒரு நொடி அந்தச் செய்தி உண்மையா என யோசித்தால்கூட போதும், இத்தகைய பல விபரீதங்களை தவிர்த்துவிடலாம். பிரபலங்கள் பற்றிய தகவல் என்றால் அவர்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் அல்லது இணையத்தளத்தில் அந்தத் தகவல் இடம்பெற்றிருக்கிறதா என்று பார்த்துக்கொள்ளலாம். அதேபோல பிரபலங்கள் பெயரில் ஒரு தகவல் வெளியானால் அது அவருடைய அதிகாரபூர்வ பக்கம் தானா என உறுதி செய்து கொள்ள வேண்டும். மிகவும் முக்கியமான தகவல் மற்றும் விநோதமான செய்தி என்றால் நிச்சயம் அவற்றைச் சரி பார்க்க முயல வேண்டும். மாறாக ஆர்வத்தில் அதை ஃபேஸ்புக்கிலோ ட்விட்டரிலோ பகிர்ந்து கொண்டால் பொய்ச்செய்திக்கு எடை கூட நாமும் காரணமாகி விடுவோம்.

எல்லாவற்றுக்கும் மேல் இணையத்தில் காணும் எல்லாம் உண்மை எனும் எண்ணத்தை முதலில் மாற்றிக்கொள்ள வேண்டும். எந்தச் செய்தியாக அல்லது தகவலாக இருந்தாலும் அது வெளியான மூல இடம் நம்பகமானதா என பார்க்க வேண்டும்.

அப்படியே அந்தத் தகவல் தொடர்பாக கூகுள் உள்ளிட்ட தேடுபொறிகளில் தேடிப்பார்த்தாலும் உண்மை விளங்கிவிடும்.

ஆனியன் அறிவோம்

இவை தவிர இணையத்தில் செயல்படும் முக்கிய தளங்களின் தன்மையை அறிந்து கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு ஆனியன் எனும் இணையத்தளம் கேலி மற்றும் நையாண்டியாக செய்திக் கட்டுரைகளை வெளியிடுவதற்கு பெயர் பெற்ற தளம். இது வெளியிடும் செய்திக் கட்டுரைகள் உண்மை போலவே இருக்கும். ஆனால் உண்மை இல்லை. கேலி மற்றும் நகைச்சுவையை விமரிசன நோக்கில் அருமையாகப்  பயன்படுத்தும் இணையத்தளம் இது. ஆனியன் பற்றி அறியாதவர்கள் அதில் வெளியாகும் கட்டுரையைப் படித்து உண்மை என நினைத்து விட்டால் விபரீதம்தான். அண்மையில் முன்னாள் பிஃபா நிர்வாகிகள் கால்பந்து சம்மேளன ஊழல் விவகாரத்தில் ஆனியன் கட்டுரையை மேற்கோள் காட்டி அசடு வழிந்தனர்.

நம்மூரில் கூட ஃபர்ஸ்ட்போஸ்ட் செய்தி தளத்தில் போலி செய்திகளுக்கு என்று ஒரு பகுதி இருக்கிறது. அதில் வெளியாகும் தலைப்புகள் முதல் பார்வையில் நெஞ்சை படபடக்க வைத்துவிடும்.

இது போன்ற இணையத்தளங்களை அறிந்து வைத்திருக்க வேண்டும். இந்தச் செய்திகளை படித்து ரசிக்க வேண்டுமே தவிர நம்பி ஏமாறக்கூடாது. எல்லோரும் ஆனியன் பற்றி அறிந்திருக்க நியாயமில்லை தான். எனில் ஒரு கட்டுரையை படித்த பின் அதன் தன்மை பற்றி உறுதி செய்து கொள்ள வேண்டும் என தோன்றினால் அந்தத் தளத்தின் அறிமுகக் குறிப்பின் பகுதியை படித்துப் பார்த்தால் அதன் தன்மை மற்றும் நோக்கம் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

எச்சரிக்கை தேவை

இந்த வகை ஏமாறுதல்கள் ஒருபுறம் இருக்க, சில வாரங்களுக்கு முன்னர் பிரபல வலைப்பதிவாளர் ஒருவர் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாக ஏமாற்றியதாக தெரியவந்தது. இவை எல்லாம் இணையத்தில் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.

நிற்க, இது போன்ற ஏமாற்று முயற்சிகளுக்கு இணையத்திலேயே மாற்று மருந்துகளும் இருக்கவே செய்கின்றன.

நோயுவர் மெமே (http://knowyourmeme.com/ ) எனும் இணையத்தளம் ஒன்று இருக்கிறது. இணையத்தில் வைரலாக பரவும் நிகழ்வுகளின் பின்னே உள்ள உண்மை மற்றும் அவை எப்படி பரவி பிரபலமாயின என்பதை விளக்கும் தளமாக இருக்கிறது. அதேபோல ஸ்னோப்ஸ்.காம் (http://www.snopes.com/) மற்றும் ஸ்மோகிங்கன் (http://www.thesmokinggun.com/) ஆகிய தளங்கள் பொய்ச்செய்திகளுக்கான விளக்கங்களை அளிக்கின்றன.

--

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com