

தமிழகத்தின் இன்றைய பரபரப்பு சூழலில் மக்களை விட அரசியல்வாதிகளே மிகவும் குழப்பத்தில் இருக்கிறார்களோ என்று எண்ணத் தோன்றும் அளவிற்கு அரசியல் நிகழ்வுகள் இருப்பதை பார்க்க முடிகிறது.
மக்கள் பிரச்னைகளை விட எப்போதும் தன் பதவிக்கும் அதிகாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துவரும் அரசியல் தலைவர்கள் இன்று மலிந்து விட்டார்கள்.
பொதுவாக வலுவான ஒரு தலைவரின் மறைவுக்குப் பிறகு அரசியலில் ஈடுசெய்ய முடியாத ஒரு வெற்றிடம் ஏற்படுவது போல் தோன்றுவது இயல்புதான். ஆனால் வரலாறு நமக்கு சொல்லுவது என்னவென்றால் விரைவில் மாபெரும் பலம் பொருந்திய, மக்கள் செல்வாக்கு மிக்க இன்னொரு தலைவரால் அந்த வெற்றிடம் நிரப்பப்படும் என்பதுதான். அந்த வகையில் அதிமுகவை பொறுத்த வரையில் எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு அப்படி ஒரு வெற்றிடத்தை அந்த கட்சி பார்த்திருக்கிறது.
அதேசமயத்தில் எம்.ஜி.ஆரின் ஆசியோடு அந்த கட்சியை இமாலய வளர்ச்சிக்கு கொண்டு சென்று சக்திவாய்ந்த தலைவராக அரசியலில் உருவெடுத்தவர்தான் ஜெயலலிதா என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. இப்போது ஜெயலலிதா மறைவு அதிமுகவிற்கு மிகப்பெரிய இழப்பு என்பதோடு அடுத்த கட்ட தலைவர் யார்? மூன்றாம் தலைமுறையில் அந்த கட்சி எப்படி எழுந்து நிற்கப்போகிறது என்ற கேள்விகள்தான் பெரிதாக எழுந்துள்ளது. இந்த ஆதிக்கப் போட்டியில் அதிமுக தலைவர்கள் கொஞ்சம் மக்களையும் கட்சித் தொண்டர்களையும் மனதில் கொள்ள வேண்டிய அவசியத்தை மறந்து விடக்கூடாது.
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று சமூகவலைத் தளங்களும், பிறநாட்டு செய்தி ஊடகங்களும் கரையாய் கரைந்த போது ஊமையா இருந்து விட்டு, இப்போது ஒரு கூட்டம் அதை கையில் எடுத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறது என்று பொது வெளியில் சிலர் சலசலத்துக் கொண்டிருப்பது காதில் விழுகிறது. உண்மையான விசுவாசிகள், உணர்வுப்பூர்வமான நேசம் மிக்கவர்கள் ஏன் அன்று இந்த சந்தேக கேள்விகளை எழுப்பவில்லை.
காலம் கடந்த ஞானம், கண்கெட்டப் பின் சூரிய நமஸ்காரம் என்றெல்லாம் ஊர்பக்கத்தில் பழமொழிகள் சொல்வது போல கேள்விகள் கேட்க வேண்டிய இடத்தில் கேட்காமல், தற்போது கேள்வி எழுப்பவதோடு சில விசயங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவர நினைப்பதற்கு பின்னால் இருக்கும் அரசியல் என்ன என்று யோசிக்கத் தோன்றுகிறது.
எது எப்படியானாலும் உண்மை வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்துக் கிடையாது. அனால் இந்த கேள்விகளை அன்றே எழுப்பியிருந்தால் உங்களின் உயரம் வேறொன்றாக இருந்திருக்கும். அதிமுகவின் அடிமட்ட தொண்டன் முதல் அத்தனை அபிமானிகளும் பொதுமக்களும் உங்களை கொண்டாடியிருப்பார்கள். என்றாலும் இன்று நீங்கள் முன்னெடுத்துள்ள தர்மயுத்ததிற்கு சத்தியம் துணைநிற்கும்.
அதேவேளை இந்த தர்மயுத்ததில் நெடுவாசல் வாழ்வாதார போராட்டம் புதைக்கப்பட்டு விடக்கூடாது என்பதையும் உணர்ந்து செயல்பட வேண்டுகிறோம். அரசியல் கலப்பில்லாத போராட்டம் தான் அரசியல் சாசனத்தை திருத்திக் கொடுத்திருக்கிறது என்பதற்கு ஒரே சாட்சி வாடிவாசல். நெடுவாசலுக்கு வந்து குரல் கொடுக்கா விட்டாலும் நெடுந்தொலைவில் நின்று வேடிக்கைப் பாருங்கள் மக்களின் எல்லாப் போராட்டங்களுக்கும் வெற்றி சாத்தியமாகும். அரசியல் வெற்றிடத்தில் இன்னொரு மணிமகுடம் உருவாகும்.
- திருமலை சோமு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.