மாணவர்களுக்கு மறுக்கப்படும் விளையாட்டு

சென்னையில் பல பள்ளிகளில் எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கே கோடை விடுமுறை இல்லை. பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மாணவர்களுக்கோ கோடை விடுமுறை ஒரு வார காலம் தான். பள்ளி திறந்த பிற
மாணவர்களுக்கு மறுக்கப்படும் விளையாட்டு
Updated on
2 min read

சென்னையில் பல பள்ளிகளில் எட்டாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கே கோடை விடுமுறை இல்லை. பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ மாணவர்களுக்கோ கோடை விடுமுறை ஒரு வார காலம் தான்.

பள்ளி திறந்த பிறகு காலை 7 மணிக்கு ஸ்பெஷல் கிளாஸ், மாலையிலும் ஸ்பெஷல் கிளாஸ்- சென்னை மட்டுமின்றி பெரிய நகர்ப்புறங்களில் உள்ள பல தனியார் பள்ளிகளில் உள்ள நிலைமை இது. இந்த நோய் தற்போது அரசு பள்ளிகளிலும் பரவியுள்ளது. அரசு பள்ளிகளும் இதுபோன்று மாணவர்களை வாட்டி வதைத்து வருகின்றன.

"மார்க்' எடுக்கும் இயந்திரங்களாக ஒவ்வொரு மாணவரையும் மாற்றி வருகின்றன தனியார் பள்ளி நிர்வாகங்கள். இதில் அவர்களை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. தேர்வில் பெறும் மதிப்பெண் அடிப்படையில்தான் திறமையும் மதிப்பிடப்படுவதால் மாணவர்களை மதிப்பெண் எடுக்கும்  இயந்திரங்களாக்குவதில் வியப்பேதுமில்லை. மேலும் கடும் போட்டி காரணமாக ஒரு சில மதிப்பெண்களில் தொழில் கல்வி மற்றும் உயர் வகுப்புகளில் இடம் கிடைக்காமல் போய்விடுவதால் மதிப்பெண் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு இன்றைய பள்ளிகள் செயல்படுகின்றன.

இந்த அணுகுமுறையால் நாம் இழந்தது ஏராளம். கலை, பண்பாடு, ஒழுக்க நெறிகள், விளையாட்டு என எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டுவிட்டன.

"காலை எழுந்தவுடன் படிப்பு, பின்னர் கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு, மாலை முழுவதும் விளையாட்டு என வழக்கப்படுத்திக் கொள்ளு பாப்பா' என்ற பாரதி பாடலுக்கு இப்போது அர்த்தமில்லாமல் போய்விட்டது.

சர்வதேச விளையாட்டு போட்டிகளில்  நாம் ஜொலிக்காததற்கு, நமது கல்விமுறையும் ஒரு காரணம் என்கின்றனர் கல்வியாளர்கள்.

மதிப்பெண் முறையிலான கல்வி காரணமாக, விளையாட்டில் ஆர்வமுள்ள மாணவர்கள் இனம் காணப்படாமல் விடப்படுகின்றனர். தனது மகனோ அல்லது மகளோ நல்ல மதிப்பெண் பெற்றால், நல்ல கல்லூரியில் சீட் கிடைக்கும். அப்புறம் நல்ல ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து கை நிறைய சம்பாதிக்கலாம் என்ற கனவே, சராசரி இந்தியப் பெற்றோரின் லட்சியமாக உள்ளது.

இம்மாதிரியான சூழ்நிலையில் மாணவர்களை படி, படி என ஒரு பக்கம் பெற்றோரும், மறு பக்கம் பள்ளிகளும் மல்லுகட்டி கொண்டு கசக்கிப் பிழிகின்றன.

9-ம் வகுப்பு முடித்தவுடனே அடுத்து 10-ம் வகுப்பு தொடக்கம் முதல் கொண்டே மாணவர்கள் பொதுத் தேர்வுக்கு தயார் செய்யப்படுகின்றனர்.

காலை நேரத்தில் சிறப்பு வகுப்புகள், அப்புறம் பள்ளியில் தொடர் படிப்பு, பின்னர்

வீடு திரும்பியதும் வீட்டுப் பாடம் என மாணவர்கள் தொடர்ந்து படிக்கும் சூழல் உள்ளது. ஒரு கட்டத்தில் மாணவர்கள் சோர்வுற்று, மனதளவில் இறுக்கம் கொள்கின்றனர். மாணவர்களிடையே உள்ள இந்த உளவியல் ரீதியான பிரச்னை பற்றி பெற்றோர் கவலை கொள்வதில்லை.

குறிப்பாக 10-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மூன்றாண்டு காலத்தில் மாணவர்கள் விளையாட்டை சுத்தமாக நினைத்துப் பார்க்க முடியாமல், படித்துக் கொண்டே இருக்க வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது.

விளையாட்டின் மூலமே மாணவரின் மன இறுக்கத்தையும், சோர்வையும் போக்கி, மனோதிடம் பெற முடியும். மன வளர்ச்சியும், உடல் உறுதியும் விளையாட்டின் மூலமே பெற முடியும் என்பதை பெற்றோர் உணர மறுக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி படிக்கும் மாணவர் அர்ஜுன் கூறியது:

பிளஸ் 2-வில் அதிகமாக மதிப்பெண் பெற வைக்க வேண்டும் என்பதற்காக, பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்தது முதல், பிளஸ் 2 பாடத்துக்குரிய பாடங்களையே கற்றுத் தருகின்றனர். வீட்டுக்கு கூட செல்ல அனுமதி அளிக்காமல், தொடர்ந்து வகுப்புகளை எடுத்து கசக்கிப் பிழிகின்றனர் என்றார்.

இதுபற்றி கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியது:

விளையாட்டு என்பது உடற்பயிற்சியோடு தொடர்புடையது. அது பல்வேறு திறன்களை வெளிக்கொணருகிறது. விளையாடும்போது மாணவர்களின் இறுக்கமான உணர்வு, பயம் ஆகியவை நீங்குகிறது. மேலும் துணிச்சல், வீரம் உள்ளவனாக ஒரு மாணவர் தன்னை மெருக்கேற்றிக் கொள்ள முடிகிறது.

குழு விளையாட்டு மூலம் விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவம் ஏற்படுகிறது. வெற்றி பெற திட்டமிடுதல் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை விளையாட்டு கற்று கொடுக்கிறது.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 60 சதவீதத்திற்கும் குறைவாக மாணவர் தேர்ச்சி விகிதம் இருக்கும்பட்சத்தில், தலைமை ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதனால் பயந்து போகும் ஆசிரியர்கள், தேர்ச்சி விகிதத்தை அதிகரித்து காட்ட வேண்டும் என்ற சூழ்நிலையில் பணிபுரிகின்றனர். முதல் மதிப்பெண் பெற்ற பள்ளி என்றால் அங்கீகாரமும், புகழும் சேருகிறது. ஆனால் ஓட்டபந்தயத்தில் தங்க பதக்கம் பெற்ற பள்ளியாக இருந்தாலும் சரி, அதற்கான அங்கீகாரம் கிடையாது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com