யிது யிருபது பைசா மதிப்பு பத்தாயிரம்!
இந்திய அரசின் நேரு இளையோர் மையத்திற்குட்பட்ட சென்னை இளைஞர் பேரவை மற்றும் சென்னை, தரமணி பகுதியைச் சேர்ந்த சிகரம் இளைஞர் நல்வாழ்வுச் சங்கம் அமைப்புகள் இணைந்து சென்னை, அரும்பாக்கம் அரசு மேனிலைப் பள்ளியில


இந்திய அரசின் நேரு இளையோர் மையத்திற்குட்பட்ட சென்னை இளைஞர் பேரவை மற்றும் சென்னை, தரமணி பகுதியைச் சேர்ந்த சிகரம் இளைஞர் நல்வாழ்வுச் சங்கம் அமைப்புகள் இணைந்து சென்னை, அரும்பாக்கம் அரசு மேனிலைப் பள்ளியில் "வரலாற்று நாணயக் கண்காட்சியை' நடத்தின. சிகரம் அமைப்பின் உறுப்பினர்களான மன்னர் மன்னன், சுப்புலட்சுமி, கோபி ஷங்கர், பாலாஜி, சாமிதுரை ஆகிய சேகரிப்பாளர்களின் நாணயங்கள், தபால் தலைகள், கொம்பினாலான கலைப் பொருட்கள், சுவடிகள் போன்றவை இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன.
தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட நாணயங்கள், பிற்காலப் பாண்டியர்கள், மாவலி, வாணாதி ராயர் காலத்தைச் சேர்ந்த நாணயங்கள், கிழக்கிந்திய, டச்சு, போர்ச்சுக்கீசிய, டேனிஷ் கம்பெனிகள் வெளியிட்ட நாணயங்கள், சுதந்திரத்துக்குப் பின் இந்தியா அச்சிட்ட நாணயங்கள், சமஸ்தானங்கள் வெளியிட்ட காசுகள், தபால் தலைகள், வெளியீட்டு முதல் நாள் உறைகள், விளம்பரம் இருக்கும் அஞ்சலட்டைகள், ஓலைச்சுவடி, எழுத்தாணி, விக்டோரியா, ஜார்ஜ் மன்னன் காலத்தைய கடிதங்கள்... எனப் பதினைந்து தலைப்பின் கீழ் சேகரிப்புகள் நம்மைப் பிரம்மிக்கவைத்தன.
""சென்னை, கன்னிமாராவில் கூட பெரும்பான்மையான நாணயங்களின் மாதிரிகள்தான் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கே நாங்கள் அரிய அசல் நாணயங்களையே கண்காட்சிக்கு வைத்துள்ளோம்'' என்றார் சேகரிப்பாளர்களில் ஒருவரான பாலாஜி.
பெலிஸ் நாட்டின் தங்கத்தால் செய்யப்பட்ட பணத்தாள் தொடங்கி சங்க கால பெருவழுதி பாண்டியன் காலத்தைச் சேர்ந்த நாணயங்கள் வரை கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. ஒவ்வொரு துறை சார்ந்த சேகரிப்புகளுக்கும் கீழே, அது தொடர்பான செய்தி அல்லது வரலாற்றுப் பெருமை, அதன் சிறப்பு போன்றவற்றையும் கொடுத்திருந்தது, கண்காட்சியைப் பார்வையிட்ட மாணவர்களுக்கு, தகவல் சுரங்கத்தைத் திறந்தது போலிருந்தது!
உதாரணத்துக்கு, சுதந்திர இந்தியாவில் 1950-லிருந்துதான் நாணயங்கள் வெளியிடப்பட்டன. முதல் "கவர்ன்மென்ட் ஆஃப் இண்டியா' என்று நாணயங்களில் ஆங்கிலத்தில் பொறித்திருந்தனர். 1957-க்குப் பிறகே "பாரத்' என்பதை இந்தியிலும் "இந்தியா' என்பதை ஆங்கிலத்திலும் நாணயங்களில் பொறித்தனர். 1950 முதல் 1956 வரை தசம எண்களைக் கொண்ட நாணயங்களும் அச்சடிக்கப்பட்டன. வெள்ளியால் செய்யப்பட்ட நாணயங்கள், காந்தியின் நூற்றாண்டு விழா, 25-வது சுதந்திர தின விழா நிகழ்வுகளின் போது வெளியிடப்பட்டன. பல நாட்டு முக்கியத் தலைவர்களை தங்களின் நாட்டு நாணயங்களில், தபால் தலைகளில் வெளியிட்டிருப்பதின் மூலம் லிபியா, போர்வா, ஐலேண்ட், லைபீரியா போன்ற பல ஏழ்மையான நாடுகள் அவர்களின் தேசிய வருமானத்தில் பாதியை அன்னிய செலாவணியாக ஈட்டுகின்றன. இந்த வகையில் ஏறக்குறைய நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் மகாத்மா காந்தியின் உருவம் பொறிக்கப்பட்ட தபால் தலைகளை வெளியிட்டிருக்கின்றன. இந்தியா வெளியிட்டிருக்கும் நாணயங்களிலேயே தண்ணீரில் மிதக்கும் நாணயம் 3 பைசா. 1962-ம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயம்தான் அதிக எடை கொண்டது... இதைப்போன்ற 150-க்கும் மேற்பட்ட தகவல்களை இந்தக் கண்காட்சியைப் பார்க்கும் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்பது இந்தக் கண்காட்சியின் சிறப்பம்சம்.
சேகரிப்பாளர்களில் ஒருவரான மன்னர் மன்னன், ""நாணயங்கள் பற்றிய தகவல் துறையை ஆங்கிலத்தில் (ய்ன்ம்ண்ள்ம்ஹற்ண்ஸ்ரீள்) என்பார்கள். இதற்கு "நாணயங்களைப் பற்றி அறிதல்' என்று அர்த்தம். நாணயங்களைப் பற்றி நாங்கள் தெரிந்து கொண்ட விஷயங்களை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்வதே இந்தக் கண்காட்சியின் நோக்கம். ஆர்வத்துடன் கேட்கும் மாணவர்களுக்கு நாணயங்களை எப்படி பராமரிக்கவேண்டும் என்பதையும் அறிவுறுத்துகிறோம். நாணயப் பாதுகாப்பு அட்டைகள், பிளாஸ்டிக் தாள்கள் கொண்டு நாணயங்களை இந்தக் கண்காட்சியில் வைப்பதற்கு மட்டும் ஏழாயிரம் ரூபாய் வரை செலவு செய்திருக்கிறோம். இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றிருக்கும் ("யிது யிருபது பைசா' என்று தமிழில் பொறிக்கப்பட்டிருக்கும் இருபது பைசா நாணயத்தின் மதிப்பு ரூபாய் பத்தாயிரமாம்!) மொத்த சேகரிப்புகளின் மதிப்பு 8 லட்சம் ரூபாய். கண்காட்சியின் பயனை மற்ற அரசுப் பள்ளிகளுக்கும் கொண்டு செல்வதற்கு நேரு இளையோர் மையத்தின் சார்பாக நடவடிக்கை எடுக்கிறோம் என்று அம்மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சஞ்சய் சாந்தகுமார் கூறியது எங்களுக்கு ஆறுதலாக இருந்தது'' என்றார்.
""வசதியான பள்ளிகளில் இந்த மாதிரியான கண்காட்சிகளை நடத்துவதில் எங்களுக்கு உடன்பாடில்லை. நாங்கள் எல்லாம் அரசுப் பள்ளியில் படித்தவர்கள்தான். அதனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கே இந்தக் கண்காட்சியை தொடர்ந்து கொண்டுசெல்வோம்'' என்றார் "சிகரம்' அமைப்பின் தலைவர் பத்மா. சென்னையில் இன்றைக்கும் வள்ளலார் நகரில் "தங்க சாலை' என்ற பெயரில் ஓர் இடம் இருக்கின்றது. ஒரு காலத்தில் நாணயங்கள் அந்தப் பகுதியில் அச்சடிக்கப்பட்டன. இது குறித்த தகவல்களும் அடுத்த கண்காட்சியில் இடம்பெற்றால், மாணவர்களுக்கு உபயோகமாக இருக்கும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...