எல்லைக் கோடு: என்.எஸ்.எம். சாகுல் ஹமீது  

Updated on
1 min read

எல்லையோரம் இடையராமல் எதிரிகளின் தொல்லை
சொல்லிப்பார்த்தும் சீறிப்பார்த்தும் நல்லிணக்க மில்லை
கோடுபோட்டு நிற்கச்சொன்னால் கேட்பவரா யில்லை
போடுபோட்டு தாக்கிடினும் சுரணையேது மில்லை!
எல்லைக்கோடு வந்தகேடும் இறைவன்தந்த தில்லை
நல்லதலைமை தந்தசீலர் பிரியமிழந்த தில்லை
நாடுபிளக்க நாடியவர்  புரிந்துகொண்ட தில்லை
கேடிழைத்த கொடியவரும் தீயணைக்க வில்லை
கொல்லும் பகையே கொள்கைத் தீயாய்
அல்லும் பகலும் அழிவே தொழிலாய்
பொல்லார் எழுந்து இழிவே செய்ததால்
நல்லோர்  எழுதிய(து) எல்லைக் கோடு!
வல்லான் வகுத்த வாய்க்கால் வழியே
நெல்லும் பருப்பும் வாய்க்கும் வழியாய்
அல்லும் பகலும் உழைக்கும் மாந்தர்
எல்லைக் கோட்டால் பிழைப்பை மறந்தார்!
அமைதியை விரும்பும் பாரத நாட்டை
இமைபோல் காக்கும் போர்த்திறம் கூட்டி
அன்பைச் சொல்லும் பார்த்தனின் மொழியால்
இன்பச் செய்தியை எல்லையில் பொழிவோம்!
எல்லை களில்லா உலகம் இயங்க
நல்லவ ரெல்லாம் உதவிட வேண்டும்
எல்லா நாட்டிலும் அன்பை விதைத்தால்
எல்லைக் கோட்டிலும் இன்பம் ஓங்கும்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com