புதுவை நாட்டுப்புறவியல் ஓர் அறிமுகம் - ஆ.திருநாகலிங்கம்; பக். 341;ரூ.275; செல்வி பதிப்பகம், புதுச்சேரி-605 004; ✆ 94423 55573.
பாரம்பரியம் மிக்க தமிழர்கள் வாழ்வில், நாட்டுப்புறவியல் முக்கியத்துவம் வாய்ந்தது. உழைப்பில் விளைந்து, உணர்வுகளின் வடிகாலாய், பண்பாட்டின் அடையாளமாய் வலம் வரும் 'நாட்டுப்புற வழக்காறுகள் தொழில், உழைப்பு, சடங்குகள், வழிபாடு, விழாக்கள், கொண்டாட்டங்கள் என வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தன்னை முன்னிறுத்தி மனித குலத்தை அரவணைத்து உலகத்தோடு ஒட்ட ஒழுகச் செய்யும் பணியைத் திறம்பட மேற்கொள்ளும் சூட்சுமத்தைத் தன்னகத்தோடு கொண்டவை' என்கிறார் நூலாசிரியர்.
மொழி, மதம், இனம், நாடு சார்ந்த ஒரு கலப்புப் பண்பாட்டிலும் நாட்டுப்புற வழக்காறுகளை இனம் பிரித்துக் காட்ட முடியும் என்பதே இந்த நூல் உணர்த்தும் செய்தி.
நாட்டுப்புறப் பாடல்கள், கதைகள், கதைப்பாடல்கள், பழமொழிகள், விடுகதைகள், தெருக்கூத்து, கழைக்கூத்து, வில்லுப்பாட்டு உள்ளிட்டவை குறித்து விரிவான சான்றுகளுடன் இந்த நூலில் ஆசிரியர் எடுத்துரைத்துள்ளார்.
புதுவைப் பகுதியில் திரௌபதி அம்மன் வழிபாடு, பஞ்ச பாண்டவர்களை அழிக்க அரக்கு மாளிகையைக் கொளுத்தும் சடங்கு, பகாசுரன் வதம், அர்ச்சுனன் தபசு, படுகளம், அரவான் களப்பலி, காத்தான் கழுவேற்றம், மயானக் கொள்ளை போன்றவற்றையும், பிரெஞ்சுக்காரர்கள் விட்டுச் சென்ற பெத்தாங் விளையாட்டு, மஸ்கராத் ஆட்டம், வடக்கத்திப் பாணி, தெற்கத்திப் பாணி, மேற்கத்திப் பாணித் தெருக்கூத்துகளில் புதுவையில் தெற்கத்திப் பாணி போன்றவற்றையும் இந்த நூலின் வழியாக நல்ல முறையில் அறியலாம்.
தாலாட்டு, சிறுவர், தொழில், காதல், பக்தி, ஆட்டம், ஒப்பாரி பாடல்களும், குடும்பம், தேவதை, புராணம், பயணம், விலங்கு, நீதிக் கதைகளும் இடம்பெற்றிருப்பது இளம்தலைமுறையினருக்கு நல்லதொரு வழிகாட்டுதல்தான்.
தமிழர் கலாசாரத்தை அறிய விரும்புவோர் வாசிக்க வேண்டிய நல்லதொரு நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.