சுந்தர் பிச்சை - ஜி.எஸ்.சிவகுமார்; சுவாசம் பதிப்பகம், பக். 159, ரூ.190; பொன்மார், சென்னை - 600127. ✆ 97890 09666.
உலக அரங்கில் இந்தியாவை அண்ணாந்து பார்க்க வைத்த தமிழர்களுள் சுந்தர் பிச்சைக்கு தனியிடம் உண்டு. அவரது வாழ்க்கையையும், கடந்து வந்த பாதையையும் எடுத்துரைக்கும் நூலாக இது வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் இணையப் பயன்பாட்டாளர்கள் அனைவரது வாழ்விலும் இரண்டறக் கலந்துவிட்ட கூகுள் என்ற தேடுபொறி நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் தமிழரைப் பற்றி அறியப்படாத பல தகவல்கள் இதில் இடம்பெற்றுள்ளன. எம்பிஏ போன்ற முதுநிலை மேலாண்மை படிப்புகளை பயிலும் முன்னர் ஏதேனும் நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு படித்தால் அதன் பலன் பன்மடங்கு அதிகமாக இருக்கும் என்பதை வாழ்க்கை அனுபவத்தின் மூலம் சுந்தர் பிச்சை உணர்த்தியிருக்கிறார்.
வாழ்க்கையின் முற்பாதியில் எவராலும் அறியப்படாத ஒரு நபர், நடுத்தர வயதில் உலக நாடுகள் அனைத்தும் பரிச்சயமான ஒரு முகமாக உருவெடுத்ததற்கு இத்தகைய மாற்று சிந்தனைகளும் காரணம் என்பது நூலில் விவரிக்கப்பட்டுள்ளது.
ஒரே நாளில் கூகுளின் தலைமைப் பொறுப்புக்கு சுந்தர் பிச்சை வந்துவிடவில்லை என்பதையும், அதற்கான பயணத்தில் எத்தனையோ சிக்கல்கள், சவால்கள், வலிகளை அவர் எதிர்கொண்டிருக்கிறார் என்பதையும் எடுத்துரைத்திருக்கிறார் நூலாசிரியர்.
மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் என ஒரு பக்கம் கொடி கட்டி பறந்த சுந்தர் பிச்சையின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் இருந்த காதலும், பந்தமும், உணர்வுகளும் வாசகர்களுக்கு சுவாரஸ்யமாக வழங்கப்பட்டிருக்கிறது. யாராக பிறக்கிறோம் என்பதை விட யாராக உருவெடுக்கிறோம் என்பதில்தான் வெற்றி ஒளிந்திருக்கிறது என்பதை சுந்தர் பிச்சையின் வாழ்க்கை மூலம் சமகால தலைமுறைக்கு உணர்த்தும் நூல் இது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.