
திருக்குறள்: முதல் மொழிபெயர்ப்பு-முனைவர் ஆ.மணி, பக்.96; ரூ.100; தமிழன்னை ஆய்வகம், புதுச்சேரி- 605 009 ✆ 94439 27141.
திருக்குறளின் முதல் மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பாளர், வெளியான ஆண்டு என்பனவற்றில் நிலவும் கருத்து வேறுபாடுகளை களையும் முயற்சியாக இந்த நூல் அமைந்துள்ளது. 1595-இல் திருக்குறளின் மலையாள மொழிபெயர்ப்பு, 1730-இல் வீரமாமுனிவரால் செய்யப்பட்ட இலத்தீன் மொழிபெயர்ப்பும் ஓலைச்சுவடிகளில் எழுதி சிலரின் பார்வைக்கு மட்டுமே கிடைத்து பாதுகாக்கப்பட்டவை.
திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1794-இல் அச்சில் கொண்டு வந்தவர் தஞ்சாவூரில் ஆட்சியராகப் பணியாற்றிய பிரிட்டிஷ்
அதிகாரி நேதனியேல் எட்வர்டு கிண்டர்ஸ்லி என்பதும், அவரது பெற்றோர், குடும்பத்தினர் குறித்த தகவலும் முழுமையாக இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.
'இந்து இலக்கிய மாதிரிகள்' என்ற தனது ஆங்கில நூலில் அச்சில் வராமல் ஓலைச் சுவடிகளில் தேங்கிக் கிடந்த திருக்குறளைப் படித்து, அதன் பெருமையை 'திருக்குறளின் சாரம் அல்லது அறிவுப் பெருங்கடல்' என்னும் தலைப்பில் மொழிபெயர்த்துள்ளார் நேதனியேல் எட்வர்டு கிண்டர்ஸ்லி. அறத்துப்பாலின் 11 அதிகாரங்களில் ஓரிரு குறட்பாக்களைத் தவிர்த்து, பிற குறள்களை அவர் மொழிபெயர்த்ததையும், திருவள்ளுவர் குறித்து தமது காலத்தில் சொல்லப்பட்ட கதைகளையும் அவர் தனது நூலில் குறிப்பிட்டுள்ளதையும் நூலாசிரியர் பதிவு செய்திருக்கிறார்.
கிண்டர்ஸ்லியின் நூல்கள் வெளிவந்த காலத்திலேயே, அதற்கு பல்வேறு இதழ்களில் மதிப்புரைகளும் வெளியான தகவலும் ஆதாரங்களுடன் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன. மேலும், கிண்டர்ஸ்லியின் மொழிபெயர்ப்பு நூல் இணையம் வாயிலாக அச்சில் கிடைக்கிற நூலாகவும் திகழ்கிறது என்ற புதிய தகவலையும் நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளது சிறப்பானதாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.