
தேசிய கல்விக் கொள்கை - 2020 எனும் மதயானை - அன்பில் மகேஸ் பொய்யாமொழி; பக்.136; ரூ.300; அன்பில் பதிப்பகம், சென்னை 600 017. ✆ 7358500250
சமத்துவக் கல்விக்கான போராட்டத்தின் பகுதி என்கிற வகையில் தேசிய கல்விக் கொள்கையின் உள்நோக்கங்களையும் ஏற்படுத்த நினைக்கும் தாக்கங்களையும் அம்பலப்படுத்தும் விதமாக வெளிவந்திருக்கும் நூல். நூலின் ஆசிரியர் மாநில அரசின் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்.
பொது அதிகாரப் பகிர்வுப் பட்டியலிலுள்ள கல்விக் கொள்கையில் மாற்றங்கள் செய்ய வேண்டுமானால், மாநில அரசுகளைக் கலந்தாலோசித்தே செயற்படுத்த வேண்டும் என்பதற்கு முரணாகக் கல்விக் கொள்கை இருப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்.
பதினான்கு இயல்களில் கல்விக் கொள்கையை அலசும் ஆசிரியர், தொடக்கத்திலேயே யுனெஸ்கோவின் உலகளாவிய நிலைப்பாட்டுடன் ஒப்பிட்டுத் தற்போதைய கல்விக் கொள்கையைப் பழைமைவாதக் கருத்துகள் என்று குறிப்பிடுகிறார்; அம்பேத்கரின் மேற்கோள்களுடன் இந்தக் கொள்கை எவ்வாறு அரசியலமைப்புக்கு எதிரானது, மாநில அதிகாரத்தைப் பறிக்கும் நயவஞ்சகம் என்று விளக்குகிறார்.
பள்ளிக் கல்வி எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பதையும் தொழிற்கல்வி என்ற பெயரில் ஏற்கெனவே தமிழ் மக்களால் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் புகுத்த மத்திய அரசு முனைவதாகவும் எச்சரிக்கிறார்.
பாரதிய ஜனதாவின் மொழிக் கொள்கையை விமர்சிப்பதுடன், தமிழ்நாட்டில் காலங்காலமாகப் பின்பற்றிவரும் சமூக நீதிக் கொள்கையைப் பறிப்பதாகக் கல்விக் கொள்கை இருக்கிறது; அரசுப் பள்ளிகளுக்கு, ஆசிரியர் நலனுக்கு எதிரானதெனக் குறிப்பிட்டு, கட்டணக் கொள்ளைக்கு வழிவகுப்பதாகவும் ஆசிரியர் கூறுகிறார்.
தேசிய கல்விக் கல்விக் கொள்கை என்ற மதயானையைத் தோலுரித்துக் காட்ட நினைப்போர் வாசித்தறிந்துகொள்ள வேண்டிய கையெறி வேல் இந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.