படித்தவர்கள், பாமரர்கள், நகர்ப்புறத்தினர், கிராமப்புறத்தினர், ஏழை, பணக்காரன், இளையோர், முதியோர் வேறுபாடுகளைக் களைந்து அனைத்து தரப்பினரையும் கையடக்கக் கருவியான செல்லிடப்பேசிகள் ஆட்கொண்டு விட்டன என்றால் மிகையல்ல.
அண்மைக் காலமாக முகநூல், கட்செவி, மின் அஞ்சல், காணொலி உள்ளிட்ட பெரும்பாலான சமூக வலைதளங்களையும், பெரும்பாலானோர் சர்வசாதாரணமாக செல்லிடப்பேசியில் இணையம் மூலமாக பயன்படுத்தி வருகின்றனர்.
20 ஆண்டுகளுக்கு முன்வரை, ஒரு இளைஞரும் இளம்பெண்ணும் பலமுறை பார்த்துப் பேசி பழகி இருப்பினும், தனது காதலை ஒருவருக்கு ஒருவர் வெளிப்படுத்திக்கொள்ளத் தயங்கி தயங்கி, தகுந்த தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர். நண்பர்கள், தோழிகளைத் தூது அனுப்பினர்.
நெருங்கிய உறவினர்களாக, ஒரே இடத்தில் பணிபுரிபவர்களாக அல்லது தினந்தோறும் சந்தித்துக் கொள்பவர்களாக இருப்பினும், காதலை வெளிப்படுத்திக்கொள்ள பெரும்பாலும் கடிதங்களையே பரிமாறிக் கொண்டனர். காதல் மலர்ந்த பிறகும்கூட நினைத்த மாத்திரத்தில் இருவரும் சந்தித்து மனம் விட்டுப் பேசி மகிழ்வதற்கு எளிதில் வாய்ப்பு கிடைக்காதென்பதால் நாள்கணக்கில் காத்திருந்தனர். இதிலும் தனிசுகம் இருப்பதாகவே உணர்ந்தனர்.
கால மாற்றத்தால் விஞ்ஞான வளர்ச்சியால் சமூக வலைதளங்களின் பயன்பாடு மிக எளிதானதால், காணாமலே காதல் மலர்ந்து வளர்ந்து கைகூடி விடுகிறது. கடிதங்களும், துாதுவர்களும் காணாமல் போகின. கண்களில் சங்கதே மொழிகளில் பேசிக்கொண்ட காதலர்கள், சமூக வலைத்தளங்களில் உறவாடி காதலை வளர்த்துக் களிப்படைந்து தம்பதியர்களாகி விடுகின்றனர்.
சட்டைப்பைகளிலும், புத்தகங்களிலும், பணப்பைகளிலும், குறிப்பேடுகளிலும் காதலன், காதலியின் படத்தை வைத்துக் கொண்டு, யாருக்கும் தெரியாமல் எடுத்துப் பார்த்து மனம் மகிழ்ந்த காலங்கள் மலையேறி, செல்லிடப்பேசியில் முகப்பு படமாக வைத்துக்கொள்ளவதும், நினைக்கும் போதெல்லாம் கருத்துக்களையும், அன்பையும் பரிமாறிக்கொள்வதும் சமூக வலைதளங்கள் வருகையால் எளிதாகிப்போனது.
சமூக வலைதளங்களின் வரவால், வெகுதொலைவில் இருப்போர் மீதும் காணமலேயே காதல் கொண்டு விருப்பத்தை வெளிப்படுத்தி காதலித்து மணம் முடிக்கும் இளையோர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இதனால், சாதி, மத பேதங்கள் குறைந்து சமூக மாற்றங்களும் நிகழ்ந்தாலும், குறுகிய காலத்திலேயே விவகாரத்து வரை சென்று விடுவதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
எப்படி இருப்பினும், கடிதங்களை, துாதுவர்களை தவிர்த்து, காதலை வெளிப்படுத்த காத்திருக்க வேண்டிய நிலையை விடுத்து, தற்கால இளைய சமூகத்தினரிடையே காணாமலே காதலை வளர்த்து களிப்பூட்டுவதில் சமூக வலைத்தளங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை.
மனித வாழ்வியலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ காரணமாக இருந்த அறிவியல் வளர்ச்சி, இளையோர் காதல் உணர்வுகளை வெளிப்படுத்தி களிப்படைவதற்கும் சமூக ஊடகங்கள் வழியே, வியத்தகு மாற்றத்தை கண்டிருப்பதில் வியப்பொன்றும் இல்லை.