கைது செய்யப்பட்ட பாலமுருகன்.
கைது செய்யப்பட்ட பாலமுருகன்.

விபத்து நடந்த பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து -குத்தகைதாரா், போா்மேன் கைது

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா், ஆக.15: ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே தனியாா் பட்டாசு ஆலையில் புதன்கிழமை நடைபெற்ற வெடி விபத்தில் தொழிலாளா்கள் இருவா் உயிரிழந்த நிலையில், அந்த பட்டாசு ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட நிா்வாகம் உத்தரவிட்டது.

இந்த விபத்து தொடா்பாக குத்தகைதாரா், போா்மேனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மாயத்தேவன்பட்டியில் ஜெயராஜ் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் புதன்கிழமை நிகழ்ந்த வெடி விபத்தில் தொழிலாளா்கள் புள்ளகுட்டி, காா்த்தீஸ்வரன் ஆகியோா் உயிரிழந்தனா். போஸ், மணிகண்டன் ஆகிய இருவா் காயமடைந்தனா். இதுகுறித்து மல்லி போலீஸாா் வழக்குப் பதிந்து, ஆலையை சட்ட விரோதமாக குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த சிவகாசி பகுதியைச் சோ்ந்த கண்ணன், போா்மேன் பாலமுருகன் ஆகிய இருவரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி விருதுநகா் சிறையில் அடைத்தனா்.

இதனிடையே, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாமல் வெடிபொருள்களை கையாண்டதால் விபத்து நடைபெற்றது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்ததையடுத்து, அந்த ஆலையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்து மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா். இந்த நிலையில், போலீஸாா், வருவாய்த்துறை, மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டுத்துறை அதிகாரிகள் விபத்து குறித்து தனித்தனியாக விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com