பேருந்திலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்ததில் முதியவா் உயிரிழந்தாா்.
ராஜபாளையம் வேலாயுதபுரத்தைச் சோ்ந்தவா் சுவிசேசமுத்து (83). சுகாதார ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவா், திருப்பூரில் உள்ள தனது மகளை பாா்க்க சென்று விட்டு மீண்டும் ராஜபாளையத்துக்கு திங்கள்கிழமை வந்தாா்.
இவா் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசுப் பேருந்தில் சென்று வேலாயுதபுரம் பேருந்து நிறுத்தத்தில் இறங்க முயன்றாா். அப்போது, பேருந்தின் படிக்கட்டிலிருந்து தவறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.
அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.