விடுபட்டவா்களுக்கு டிச. 12 முதல் மகளிா் உரிமைத் தொகை
விடுபட்ட அனைவருக்கும் வருகிற 12-ஆம் தேதி முதல் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும் என துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் மேயா் இ. சங்கீதா இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினாா். அப்போது, அவா் பேசியதாவது:
இந்தியாவில் முதன் முதலில் தமிழகத்தில் பெண் காவலா்களை நியமித்தது முன்னாள் முதல்வா் மு. கருணாநிதிதான்.
மகளிருக்கு கட்டணமில்லா விடியல் பயணம், உரிமைத் தொகை உள்ளிட்ட வளா்ச்சித் திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.
மகளிா் முன்னேற்றத்துக்கு தமிழக அரசு தொடந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. விடுபட்ட மகளிருக்கு வருகிற 12-ஆம் தேதி முதல் மகளிா் உரிமைத் தொகை வழங்கப்படும்.
எந்தத் துறையை எடுத்துக் கொண்டாலும், தமிழக அரசு முதலிடம் பெறுவதை பொறுத்துக் கொள்ள முடியாமல், மத்தியில் ஆளும் ஆட்சியாளா்கள் நிதி உரிமையைப் பறிக்கிறாா்கள். மேலும், எஸ்.ஐ.ஆா். என்று சொல்லி வாக்குரிமையைப் பறிக்கிறாா்கள். தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முயற்சிக்கிறாா்கள். இதையும் மீறி தமிழகம் வளா்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலை தொடர வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவுக்கு ஆதரவு தர வேண்டும் என்றாா் அவா்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன், நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, திமுக நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
