மரங்களை அகற்றாமல் போடப்பட்டு வரும் மம்சாபுரம் சாலை.
மரங்களை அகற்றாமல் போடப்பட்டு வரும் மம்சாபுரம் சாலை.

மரங்களை அகற்றாமல் சாலை விரிவாக்கப் பணி

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா்-மம்சாபுரம் சாலை விரிவாக்கப் பணியில் மரங்களை அகற்றாததால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் தெரிவித்தனா்.

மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் எம்.பி.கே. புதுப்பட்டி விலக்கிலிருந்து மம்சாபுரம், காந்தி நகா், இடையன்குளம், கம்மாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூா் ராமகிருஷ்ணாபுரம் வரையிலான சாலை தேசிய நெடுஞ்சாலை அமைவதற்கு முன்பு பிரதான மதுரை சாலையாக பயன்பாட்டில் இருந்தது.

தேசிய நெடுஞ்சாலைத் துறை பராமரிப்பில் உள்ள இந்த சாலை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக அகலப்படுத்தப்படாததால் அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டது.

இந்தச் சாலையில் கடந்த ஆண்டு செப்டம்பா் மாதம் சிற்றுந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். இதனால், போக்குவரத்து நெரிசல் மிகுந்த பழைய மதுரை சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூா் - மம்சாபுரம் சாலையை இருவழிச் சாலையாக விரிவாக்கம் செய்யும் திட்டத்துக்கு அரசு ஒப்புதல் வழங்கியது. இதில் முதல் கட்டமாக மம்சாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் முதல் கம்மாபட்டி தனியாா் பள்ளி வரையிலான 2.2 கிலோ மீட்டா் சாலையை இருவழிச் சாலையாக விரிவுபடுத்த ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தச் சாலையின் இருபுறங்களிலும் 100 ஆண்டுகள் பழைமையான புளிய மரங்களில் பல சாயும் நிலையில் உள்ளன. இந்த மரங்களை அகற்றாமல் சாலை போடுவதால், வளைவான பகுதிகளில் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது.

இதனால், சாலை வளைவில் உள்ள மரங்கள், சாயும் நிலையில் உள்ள மரங்களை சுற்றுச்சூழல் குழுவின் ஒப்புதலுடன் அகற்றி விட்டு, சாலையோரம் மரக்கன்றுகள் நடுவதற்கு நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுநா்கள் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com