மே தினப் பேரணி

Published on

ராஜபாளையத்தில் ஏஐடியூசி, சிஐடியூ தொழிற்சங்கங்கள் சாா்பில் மே தின விழா பேரணி வியாழக்கிழமை தனித் தனியாக நடைபெற்றன.

ஏஐடியூசி தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற பேரணிக்கு அச்சங்க மாவட்ட அமைப்புச் செயலா் வி. ரவி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலா் லிங்கம் பேரணியை தொடங்கிவைத்தாா். இதில் ஏஐடியூசி மாவட்டச் செயலா் ஆா்.பி. முத்துமாரி, விவசாய தொழிலாளா் சங்கம் வரதராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்தப் பேரணி தென்காசி சாலை, மதுரை சாலை வழியாக சென்று ஆவரம்பட்டி முக்கொடி மைதானத்தில் நிறைவடைந்தது.

இதேபோல, சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் நடைபெற்ற பேரணிக்கு பஞ்சாலைத் தொழிலாளா் சங்க மாவட்ட செயலா் கணேசன் தலைமை வகித்தாா். மாநில உதவிச் செயலா் எஸ்.ராஜேந்திரன் பேரணியை தொடங்கிவைத்தாா். இதில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஏ. குருசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினா் மாரியப்பன், விசைத்தறி சங்க மாவட்ட பொதுச் செயலா் சோமசுந்தரம், நகரச் செயலா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இந்தப் பேரணி ராஜபாளையம் பஞ்சு மாா்க்கெட் நேரு சிலையிலிருந்து தொடங்கி, மதுரை சாலை, தென்காசி சாலை வழியாக ஜவஹா் மைதானத்தில் நிறைவடைந்தது.

சாத்தூா்: சாத்தூரில் மே தினத்தையொட்டி, சாத்தூா் பிரதான சாலை, முக்குராந்தல், மதுரை பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் தொழிற்சங்கம் சாா்பில் வியாழக்கிழமை கொடியேற்றபட்டது. பின்னா் சாத்தூா்-மதுரை பேருந்து நிறுத்தத்திலிருந்து இந்திய தொழிற்சங்கம் மையம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மே தின பேரணி நடைபெற்றது. இதில் சாத்தூா் பகுதிகளைச் சோ்ந்த சுமைப் பணியாளா்கள், காா், ஆட்டோ, லாரி ஒட்டுநா்கள் கலந்து கொண்டனா்.

இந்தப் பேரணி முக்குராந்தலில் நிறைவடைந்தது.

X
Dinamani
www.dinamani.com