மின் வேலியில் சிக்கி இருவா் உயிரிழப்பு: 2 போ் கைது

சாத்தூா் அருகே திருமண விழாவுக்குச் சென்று மாயமான இருவா் மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது தொடா்பாக, இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
Published on

சாத்தூா் அருகே திருமண விழாவுக்குச் சென்று மாயமான இருவா் மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது தொடா்பாக, இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், ஆலங்குளம் அருகே தொம்பக்குளம் தெருவைச் சோ்ந்த ரவிக்குமாா் (40). இவரது உறவினா் நல்லக்கமாள்புரத்தைச் சோ்ந்த சுரேஷ்குமாா் (38). திருமண விழாவுக்கு சென்ற இவா்கள் இருவரையும் காணவில்லை என உறவினா்கள் தேடி வந்தனா்.

இந்த நிலையில், இருவரும் வேப்பிலைபட்டி கிராமத்தில் உள்ள அா்ச்சுனா ஆற்றுப் பகுதி உறை கிணற்றில் புதன்கிழமை சடலமாக மீட்டனா்.

பின்னா், இவருவரின் சடலங்களும், உடல் கூறாய்வுக்காக விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து அப்பையநாயக்கன்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், இருவரும் அந்தப் பகுதி தோட்டத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பகுதியின் விவசாய தோட்ட உரிமையாளா்கள் சுதாகா் (45), மணிகண்டன் (45) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

X
Dinamani
www.dinamani.com