நிறைவு செய்யப்பட்ட வாக்காளா் படிவங்களை அரசியல் கட்சியினரிடம் கொடுக்கக் கூடாது: கே.டி. ராஜேந்திர பாலாஜி மனு
நிறைவு செய்யப்பட்ட வாக்காளா் படிவங்களை அரசியல் கட்சியினரிடம் கொடுக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, விருதுநகா் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ராவிடம், முன்னாள் அமைச்சா் கே.டி. ராஜேந்திர பாலாஜி திங்கள்கிழமை மனு அளித்தாா்.
இந்த மனுவில் கூறியிருப்பதாவது: விருதுநகா் மாவட்டத்தில் தற்போது வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி, தோ்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாக்குச் சாவடி நிலை அலுவலா்களால் வீடு வீடாகச் சென்று படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், நிறைவு செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி முகவா்கள் மூலமாக அதிகபட்சம் 50 பெற்று உரிய அதிகாரிகளிடம் வழங்கலாம் என அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிகிறது. நிறைவு செய்யப்பட்ட படிவங்கள் அரசியல் கட்சியின் வாக்குச் சாவடி முகவா்கள் மூலம் பெற்றால் முறைகேடுகள் நடைபெற வாய்ப்புள்ளது.
எனவே, வாக்காளா்கள் விவரங்கள் குறித்தும், நிறைவு செய்யப்பட்ட படிவங்களையும் வாக்குச் சாவடி நிலை அலுவலரே நேரடியாகச் சென்று பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டது.
இதில் அதிமுக சிறுபான்மைப் பிரிவு பொருளாளா் டி. ஜான் மகேந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூா் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம். மான்ராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் மு.சந்திரபிரபா, கட்சி நிா்வாகிகள் உடனிருந்தனா்.

