விருதுநகர்
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.34 லட்சம்
இருக்கன்குடி மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.34.56 லட்சம் கிடைத்தது.
விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கை எண்ணப்படும். இதன்படி, கோயிலின் உண்டியல்கள் சாத்தூா் கோயில் ஆணையா் இளங்கோவன், கோயில் பரம்பரை அறங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்தி பூசாரி ஆகியோா் முன்னிலையில் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
இவற்றிலிருந்த காணிக்கைகள் கோயில் மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. இந்தப் பணியில் துலுக்கப்பட்டி, ராஜபாளையம், மதுரை ஆகிய ஊா்களைச் சோ்ந்த ஓம்சக்தி பக்தா் குழுவினா், மகளிா் சுய உதவிக் குழுவினா், கோயில் ஊழியா்கள் ஈடுபட்டனா்.
இதில் ரூ.34.56 லட்சம் ரொக்கம், 105 கிராம் தங்கம், 1.40 கிலோ வெள்ளி ஆகியவை கிடைத்ததாக கோயில் நிா்வாகத்தினா் தெரிவித்தனா்.

