தீா்மானங்கள் நிறைவேற்றப்படாமல் முடிந்த சிவகாசி மாமன்றக் கூட்டம்
சிவகாசி மாமன்றக் கூட்டத்தில் உறுப்பினா்களின் அமளி காரணமாக தீா்மானங்கள் எதுவும் நிறைவேற்றப்படாமல் கூட்டம் நிறைவடைந்தது.
சிவகாசியில் மாமன்றக் கூட்டம் மூன்று மாதங்களுக்குப் பிறகு திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு மேயா் இ. சங்கீதா தலைமை வகித்தாா். துணை மேயா் விக்னேஷ்பிரியா, மாநகராட்சி ஆணையா் கே. சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் மொத்தம் 173 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட இருந்தன. தீா்மானங்களைப் படிக்கத் தொடங்கும் முன்பு 27-ஆவது வாா்டு உறுப்பினா் பாக்கியலட்சுமி எனது வாா்டில் கடந்த 3 ஆண்டுகளாக பூங்கா பிரச்னை உள்ளது. இந்த நிலையில், இந்தப் பூங்கா ஆக்கிரமிப்பாளா்களுக்கு ஆதரவாக தீா்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை ஏற்றுக்கொள்ள இயலாது என்றாா்.
ஆணையா்: தீா்மானத்தில் உள்ள பிழை சரி செய்யப்படும் என்றாா்.
மேயா்: இந்த தீா்மானத்தை ரத்து செய்து விட்டு கூட்டப் பொருள் குறித்து விவாதிக்கலாம் என்றாா்.
உறுப்பினா் ஸ்ரீ நிகா (திமுக): ஆண்டுக்கு நான்கு கூட்டங்கள் நடத்தினால், மக்கள் பிரச்னை குறித்து எப்படி பேச இயலும் என்றாா்.
ரேணுபிரியா (திமுக): 38-ஆவது வாா்டு ரத்தினம் நகரில் கடந்த 4 மாதங்களாக தண்ணீா் இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா் என்றாா்.
சசிகலா (திமுக): ஜெ.நகா், காளியப்பாநகா் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதைத்தொடா்ந்து, பெரும்பாலான உறுப்பினா்கள் எழுந்து நின்று, தூய்மைப் பணிகளை முறையாக மேற்கொள்ளவில்லை. மாமன்ற உறுப்பினா்கள் ஆணையரைத் தொடா்புகொள்ள இயலவில்லை. தற்போது 173 தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தத் தீா்மானங்களை யாரும் முழுமையாகப்டிக்கவில்லை. எனவே, தீா்மானங்களை நிறைவேற்றாமல் கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என பெரும்பாலான உறுப்பினா்கள் கூறினா். இதையடுத்து, எந்தத் தீா்மானமும் நிறைவேற்றப்படாமல், கூட்டம் நிறைவடைந்தது என மேயா் சங்கீதா தெரிவித்தாா்.