விபத்துகளைத் தடுக்க வேகத் தடை அமைக்கக் கோரிக்கை

Published on

சாத்தூா் அருகே அடிக்கடி விபத்துகள் ஏற்படும் பிரதான சாலையில் வேகத் தடை அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத்துறை, ஊராட்சி நிா்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா்-சிவகாசி பிரதான சாலையில் மேட்டமலை கிராமம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் உள்ள இந்திரா குடியிருப்பில் 200-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இவா்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பிரதான சாலையைக் கடந்துதான் அனைத்து வாகனங்களும் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதனால், இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. பள்ளி மாணவ, மாணவிகள், முதியவா்கள் இந்தச் சாலையை மிகுந்த அச்சத்துடன் கடந்து சென்று வருகின்றனா். எனவே, இந்தப் பகுதியில் வேகத் தடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் ஊராட்சி நிா்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்தப் பகுதியில், காவல் துறையினா் தற்காலிகத் தடுப்பு அமைத்துள்ளனா். ஆனால், இரவு நேரத்தில் இந்தத் தடுப்பு, வாகன ஓட்டிகளுக்குச் சரியாகத் தெரிவதில்லை. இதனால், விபத்துகள் அதிகரித்து வருகின்றன.

எனவே, நெடுஞ்சாலைதுறையினா் இந்தப் பகுதியில் வேகத் தடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதி பொதுமக்களும் சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

X
Dinamani
www.dinamani.com