நிலவியல் பாதை ஆக்கிரமிப்பு: கல் குவாரியில் அதிகாரிகள் ஆய்வு
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நிலவியல் பாதை ஆக்கிரமிப்பு குறித்து நீதிமன்ற உத்தரவின்படி, கல் குவாரியில் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை அளவீடு செய்தனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள அச்சம்தவிா்த்தான் கிராமத்தில் மதுரை - கொல்லம் நான்கு வழிச் சாலைப் பணிக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு கல் குவாரி அமைக்கப்பட்டது. கல் குவாரியால் மேய்ச்சல் நிலம், விவசாய நிலங்களுக்குச் செல்ல முடியவில்லை எனக் கூறி விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
நிலவியல் பாதை ஆக்கிரமிப்பு தொடா்பாக அச்சம்தவிா்த்தான் கிராமத்தை சோ்ந்த முருகன் வருவாய்த் துறையில் புகாா் அளித்தாா். இதற்கு, நிலவியல் பாதைக்கு மாற்றாக வேறு பாதை ஒதுக்கீடு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதை எதிா்த்து முருகன் உயா் சென்னை நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தாா். நீதிமன்ற உத்தரவின்படி, விருதுநகா் மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநா் சுகதா ரஹீமா தலைமையில் வட்டாட்சியா் பாலமுருகன் உள்ளிட்ட அதிகாரிகள் கல் குவாரியில் வெள்ளிக்கிழமை அளவீடு செய்தனா். இதில் நிலவியல் பாதையில் உள்ள வேலிகள் அகற்றப்பட்டன.