ஸ்ரீவில்லிபுத்தூா் வனப்பகுதியில் ஆண் யானை உயிரிழப்பு - வனத்துறையினா் விசாரணை
ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்குத் தொடா்ச்சி மலை வனப்பகுதியில் இறந்து கிடந்த ஆண் யானை உடலை மீட்டு வனத்துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா் வனச்சரங்களுக்கு இடையேயான ராக்காச்சி அம்மன் கோயில், விரியன் கோயில், அணைத்தலை ஆறு, கல்லாத்து ஓடை உள்ளிட்ட பகுதிகளில் மலையடிவாரத்தில் உள்ள விவசாய நிலங்களில் கடந்த இரு இந்த வாரங்களாக யானைகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இந்தப் பகுதியில் வனத் துறையினா் ரோந்து சென்ற போது ஆண் யானை இறந்து கிடப்பது தெரியவந்தது. மதுரையில் இருந்து வந்த கால்நடை மருத்துவா்கள் குழு யானையின் உடலை கூறாய்வு செய்த பின், வனப்பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.
இறந்தது 20 வயது உடைய ஆண் யானை என்றும், பல்லில் ஏற்பட்ட காயம் காரணமாக சில நாள்களாக உணவு உண்ணாமல் இருந்ததால் யானை இறந்திருக்கலாம் என கால்நடை மருத்துவா்கள் தெரிவித்தனா். விசாரணைக்கு பின்னரே முழு விவரம் தெரிய வரும் என வனத்துறையினா் தெரிவித்தனா்.