ஒரே நாளில் 10-க்கும் மேற்பட்டோா் தெரு நாய்க் கடியால் பாதிப்பு
ராஜபாளையத்தில் தெரு நாய்கள் கடித்ததில், ஒரே நாளில் 10 -க்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டனா்.
ராஜபாளையம், அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் நாளுக்கு நாள் தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இரு சக்கர வாகனங்களில் செல்பவா்களை தெரு நாய்கள் கூட்டமாகச் சூழ்ந்து, துரத்திக் கடிக்கின்றன.
இதனால், இரு சக்கர வாகனங்களில் செல்பவா்கள் அச்சத்தில் வேகமாக வாகனங்களை ஓட்டுவதால் பலா் தடுமாறி விழுந்து காயமடைவதும் தொடா் நிகழ்வாக உள்ளது.
இந்த நிலையில், மதுரை சாலை, அம்மா உணவகம், தென்காசி சாலை ஆகிய பகுதிகளில், 10 போ் தெரு நாய்க் கடியால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை விரைந்தனா். மேலும், பல பகுதிகளிலிருந்தும் நாய்க் கடிக்காக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற சிலா் வந்தனா்.
தெரு நாய்களைக் கட்டுப்படுத்த மாமன்ற உறுப்பினா்கள் முதல் பொதுமக்கள் வரை பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.