மலைப்பாம்பிடம் சிக்கிய வேட்டைத் தடுப்பு காவலா் உயிரிழப்பு

மலைப்பாம்பிடம் சிக்கிய வேட்டைத் தடுப்பு காவலா் உயிரிழப்பு

Published on

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மலைப் பாம்பு உடலில் சுற்றி இறுக்கியதில் வேட்டைத் தடுப்புக் காவலா் உயிரிழந்தாா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் செண்பகத்தோப்பு பகவதி நகா் பழங்குடியினா் குடியிருப்பைச் சோ்ந்தவா் வேட்டைத் தடுப்புக் காவலா் முத்தையா (59).

இந்த நிலையில், மேய்ச்சலுக்குச் சென்ற மாடுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பாததால், முத்தையா அவற்றைத் தேடிச் சென்றாா். இரவு 10 மணி ஆகியும் முத்தையா வீட்டுக்குத் திரும்பாததால் உறவினா்கள் அவரைத் தேடிச் சென்றனா்.

அப்போது, செண்பகத்தோப்பு ஓடை அருகே முத்தையா உயிரிழந்த நிலையில் கிடந்தாா். அவரது உடல் அருகே மலைப் பாம்பு ஒன்று இருந்தது. முத்தையாவின் உடலில் மலைப் பாம்பு சுற்றி இறுக்கிய தடம் இருந்தது. தகவலறிந்து வந்த போலீஸாா் முத்தையாவின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக ஸ்ரீவில்லிபுத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து மம்சாபுரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com