விருதுநகரில் போக்குவரத்து விதிமீறல்: ஓராண்டில் ரூ.33.88 கோடி அபராதம்
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டது தொடா்பாக ரூ. 33.88 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.
இதுகுறித்து விருதுநகா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விருதுநகா் மாவட்டத்தில் கடந்த 2025-ஆம் ஆண்டு பதிவான 353 திருட்டு வழக்குகளில் 295 வழக்குகள் கண்டறியப்பட்டு ரூ. 3.10 கோடி சொத்துகள் மீட்கப்பட்டன. காவல் துறையினரின் தீவிர ரோந்துப் பணி உள்ளிட்டவைகளால் கடந்த 2024-ஆம் ஆண்டைவிட 16 சதவீதம் குறைவாக, 2025-இல் 353 வழக்குகள் பதிவாகி உள்ளன. மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 18 வழக்குகளில் குற்றவாளிகளுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. 259 கஞ்சா வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 411 போ் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து 102 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்ததாக 1,330 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ. 29 லட்சம் மதிப்பிலான புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கடை உரிமையாளா்கள் 213 பேரிடமிருந்து ரூ. 60 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது.
மாவட்டத்தில் காணாமல் போன 863 நபா்களில் 791 போ் மீட்கப்பட்டு அவா்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனா். போக்குவரத்து விதிமீறல்கள் என 4.44 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டதில் ரூ. 33.88 கோடி வசூல் செய்யப்பட்டது. விருதுநகா் மாவட்டத்தை குற்றமில்லா மாவட்டமாக மாற்ற பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.
