
இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக நகரங்களில் வசிப்போர் உணவுக்காக அதிகமாக உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களையே நம்பியிருக்கின்றனர். தனியாக வசிக்கும் இளைஞர்கள் மட்டுமின்றி வேலை காரணமாக குடும்பமாக இருக்கும் பலரும் வீட்டில் இருந்தே உணவை ஆர்டர் செய்து பெறுகின்றனர்.
இதற்காக ஒவ்வொரு நிறுவனங்களும் பிரத்யேக செயலியை வைத்திருக்கின்றன. அந்தந்த செயலிகளில் மூலமாக வாடிக்கையாளர்கள் உணவை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்கிறார்கள்.
இந்த உணவு டெலிவரி செயலிகள் மூலமாகவும் பண மோசடி நடக்கிறது.
எப்படி நடக்கிறது இந்த மோசடி?
ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற உணவு செயலிகள் வைத்திருப்போருக்கு ஒரு தானியங்கி போன் அழைப்பு(ஐவிஆர் அழைப்பு) வருகிறது. உணவு டெலிவரி நிறுவன வாடிக்கையாளர் சேவை என்றும் உங்களுடைய ஆர்டர் சரிபார்ப்பு அல்லது உங்களுடைய லாக்-இன் சரிபார்ப்பு என்று கூறி உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி-யைக் கேட்கிறார்கள். வாடிக்கையாளர்களும் அவர் நிறுவன ஊழியர்தான் என்று நம்பி ஓடிபியைப் பகிர்கின்றனர்.
விழாக்கால சலுகையில் உணவுகளை தள்ளுபடி விலையில் தருகிறோம் என ஆஃபர்கள் பெயரிலும் ஓடிபி கேட்டு மோசடி நடக்கிறது.
இதன் மூலமாக வாடிக்கையாளர்களின் செயலி அல்லது போனில் உள்ள தனிப்பட்ட விவரங்களை 'மென்பொருள்' மூலமாகத் திருடுகின்றனர். தனிப்பட்ட விவரங்களை வைத்து பணத்தை மிரட்டிப் பெறலாம்.
உங்களுடைய உணவு டெலிவரி செயலி லாக்-இன் விவரங்களைப் பயன்படுத்தி 'pay later' (பணத்தை அப்புறமாக செலுத்திக்கொள்வது) வசதியுடன் உணவு ஆர்டர் செய்து பெற்றுக்கொள்வார்கள். இதனால் நீங்கள் ஆர்டர் செய்யாத உணவுக்கு நீங்கள் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
பாதுகாப்பாக இருங்கள்!
உணவு ஆர்டர் செயலிதான் என்று அலட்சியமாக இருக்க வேண்டாம். போலி உணவு விநியோக செயலி மோசடி குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
இதுபோன்ற நிறுவனங்களில் வாடிக்கையாளர் சேவை என்று கூறி ஓடிபி போன்ற விவரங்களைக் கேட்பதில்லை.
அதனால் ஓடிபி அல்லது தனிப்பட்ட விவரங்களை ஒருபோதும் தொலைபேசியில் பகிர வேண்டாம்.
உணவு விநியோக சேவைகளில் இருந்து வரும் போன் அழைப்புகளை கவனமுடன் கையாள வேண்டும்.
உணவு டெலிவரி செய்பவரிடமும் தனிப்பட்ட விவரங்களை பகிர வேண்டாம்.
சந்தேகத்திற்கிடமான விஷயங்கள் இருந்தால் கண்காணித்து சம்மந்தப்பட்ட நிறுவனத்திடம் புகார் அளிக்கவும்.
செயலியின் பாதுகாப்புக்கு இரண்டு-அடுக்கு பாதுகாப்பை (2FA) செயல்படுத்துங்கள்.
இணையவழி மோசடிகளுக்கு 1930 அல்லது https://www.cybercrime.gov.in. என்ற இணையதளம் மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.