ராக்கெட் வேகத்தை விட அதிக வேகத்தில் ஏறி, மின்னல் போல விலை இறங்கி, பொருளாதார நிபுணர்களுக்கு கண்ணாமூச்சிக் காட்டிக்கொண்டிருக்கும் தங்கம் விலையை நினைத்து வாங்காதவர்கள், வாங்குபவர்கள் என பலரும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தங்கம் விலை ஏறி, இறங்குவதற்கும், மறுபக்கம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அறிவிப்புகளுக்கும் தொடர்பிருக்கிறது என்று கூறப்படுகிறது. மறுபக்கமோ, அமெரிக்க டாலரை வீழ்த்த, சீனா தங்கம் மற்றும் வெள்ளியை அதிகம் வாங்கி குவிக்கிறது என்கிறார்கள்.
ஆனால், நம் ஊரில் விற்பனையாகும் தங்கம் விலைக்கும், டொனால்ட் டிரம்புக்கும் சீன நாட்டுக்கும் எப்படி தொடர்பு ஏற்படுகிறது என்பதை சாமானிய மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
இவற்றை தாண்டி, தங்கம் வாங்குவது பற்றி மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் சில கொள்கைகளை வகுத்து விதிகளை அறிவித்துள்ளன. அவற்றையும் மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அதாவது, ஒரு நகைக் கடைக்குச் சென்று ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்கும்போது, ஒருவர் தன்னுடைய பான் அட்டையைச் சமர்ப்பிக்க வேண்டும். இது கட்டாயம்.
அதுவே, ரூ.10 லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்குவதாக இருந்தால், பான் அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழையும் கொடுக்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது.
சரி, ஒரேடியாக ரூ.10 லட்சத்துக்கு பில் போட்டால்தான் பிரச்னை என்று நினைக்கலாம். ஆனால் ஒருவர் வாங்கும் தங்கத்துக்கு ரசீதுகளை பிரித்துப் போடக்கூடாது. அவ்வாறு செய்தால், நகைக் கடை மீது நடவடிக்கை பாயும்.
தங்கம் விலைக்கு 3 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் செய்கூலிக்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி. இதையும் வாங்குபவர்கள்தான் செலுத்த வேண்டும்.
ஒரு லட்சத்துக்கு தங்கம் வாங்கினால் ஜிஎஸ்டியே விலை மற்றும் செய்கூலிக்கு ஏற்ப கிட்டத்தட்ட ரூ.8000 வரலாம்.
ஒரு நகைக்கடைக்காரர் ஜிஎஸ்டி வசூலிக்கும்பட்சத்தில், நகை வாங்குபவருக்கு அளித்த ரசீதில் அவருடைய ஜிஎஸ்டி கணக்கு விவரம் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
டிஜிட்டல் முறையில் தங்கம் வாங்கும்போது செபி / ஆர்பிஐ -ஆல் அங்கீகரிக்கப்பட்ட தளங்களில்தான் வாங்க வேண்டும்.
வெளிநாடுகளில் இருந்து தங்கம் வாங்கி வரும்போது அதற்கு சுங்கக் கட்டணம் செலுத்த வேண்டும்.
ரூ.2 லட்சத்துக்கு மேல் தங்கம் வாங்கும்போது, பணமாகக் கொடுத்து தங்கம் வாங்க முடியாது. யுபிஐ / வங்கிப் பணப்பரிமாற்றம் / வங்கி அட்டைகள் மூலமாகத்தான் வாங்க முடியும்.
எப்போது தங்கம் வாங்கினாலும் அதற்குரிய ரசீதை கேட்டு வாங்கிக் கொள்வது சட்ட ரீதியான நடவடிக்கைகளை சமாளிக்க உதவும்.
எப்போதும் ஹால்மார்க் முத்திரை கொண்ட நகைகளை வாங்கலாம்.
வருமான வரித் தாக்கல் செய்யும்போது, கைவசம் உள்ள தங்க நகைகள் குறித்து தெரிவிக்க வேண்டியதில்லை. ஆனாலும், தங்க நகை வாங்கும்போது ரசீதுகளை வாங்கி அதனை பராமரிப்பது அவசியம்.
பணப்பரிமாற்ற விவரங்களையும் பாதுகாக்க வேண்டும்.
தங்கம் வாங்கும்போது, வெளிப்படையான நடைமுறைகளைப் பின்பற்றுவது, தேவையற்ற வரித்துறை நடவடிக்கைகளில் இருந்து தற்காக்க உதவும்.
முக்கியமான சில நாள்களில் செய்கூலி, சேதாரம் இல்லை என்று சலுகைகள் அறிவிக்கப்படும். அந்த நாள்களை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.