

ஒவ்வொரு ஆண்டும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்போது, அதன் மீதான கவனத்தையும் தாண்டி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கட்டி வரும் புடவைகளும் தனிக்கவனம் பெறுவதுண்டு.
இந்த ஆண்டு, நிர்மலா சீதாராமன் காஞ்சிபுரம் பட்டுப்புடவையைக் கட்டி வந்தார். தொடர்ச்சியாக ஒன்பதாவது முறையாக நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய நாடாளுமன்றத்துக்கு வந்த போது, நாடு முழுவதும் அவர் தாக்கல் செய்யவிருக்கும் பட்ஜெட்டில் இருக்கும் எண்கள், துறைகள் தொடர்பான எதிர்பார்ப்புகள் அதிகரித்தன.
அதே வேளையில், மற்றொன்றும் பலரது கவனத்தை ஈர்த்தன. அதுதான் அவர் அணிந்திருந்த புடவை. அது காஞ்சிபுரம் பட்டுப்புடவை
இந்த ஆண்டு, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருப்பதால், அவரது கவனம் தெற்கு நோக்கித் திரும்பியிருக்கலாம் என்று இதனைப் பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.
காஞ்சிபுரத்தில் நெய்யப்பட்ட, ஒரு ஆழமான மெஜந்தா-மெரூன் நிற பட்டுபுடவையை இந்த ஆண்டு நிர்மலா சீதாராமன் தேர்ந்தெடுத்துள்ளார். காஞ்சிபுரம் பட்டு என்றாலே, அதன் மென்மை, நீடித்து உழைக்கும் தன்மை மற்றும் பிரமாண்டத்திற்குப் பெயர் பெற்றது என்பதை அனைவருமே நன்கறிவர்.
அதுவும் குறிப்பாக இந்தப் புடவையில் ஜரிகையில் கட்டம் போட்டு, நீல நிற பார்டருடன் வெந்தைய மஞ்சள் நிறத்தில் வேளைப்பாடு மற்றும் தலைப்புப் பக்கம் இணைக்கப்பட்டிருந்தது. பலரும், இந்தப் புடவை தமிழகத்தின் நூற்றாண்டுகள் பழமையான நெசவுத் திறமையை பறைசாற்றும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறுகிறார்கள்.
கடந்த ஆண்டுகளில் அவர் அணிந்திருந்த புடவைகளோடு, இந்த ஆண்டு அவர் அணிந்து வந்திருக்கும் காஞ்சி பட்டு, ஒரு சமநிலையை ஏற்படுத்துவது போல பலருக்கும் தோன்றியிருக்கிறது.
கடந்த 2025 ஆம் ஆண்டில், பிகார் தேர்தல் விரைவில் நடைபெறவிருந்த நிலையில், நிர்மலா சீதாராமன், கையால் வரையப்பட்ட மதுபானி கலையால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளை நிற கைத்தறி பட்டுச் சேலையை அணிந்திருந்தார். இது பத்மஸ்ரீ விருது பெற்ற துலாரி தேவியால் அவருக்கு பரிசளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப் புடவையில் மிதிலா பகுதியின் நாட்டுப்புற கலை மீது தேசிய கவனத்தை ஈர்க்க வைத்தது. அப்போது, இந்தப் புடவை பிகாரின் கலாசார அங்கீகாரத்தை ஏற்படுத்தும் வகையில் பார்க்கப்பட்டது.
இதுபோலவே, கடந்த காலங்களில், நிர்மலா அணிந்து வந்த புடவைகளின் பின்னணியும் சுழல்கிறது.
2024 ஆம் ஆண்டில், அவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த காந்தா கைவேலைப்பாட்டுடன் கூடிய நீல நிற டஸ்ஸர் பட்டுப் புடவையை அணிந்து வந்தார். அது, துணிகளில் கைகளால் செய்யப்படும் வேலைப்பாடுகள் மூலம் கதைகளைச் சொல்லும் ஓடும் தையல்முறை.
அதற்கு முன்பு, 2023 ஆம் ஆண்டில், பளீச்சென்ற சிவப்பு பட்டுப் புடவையில், கருப்பு மற்றும் தங்க ஜரிகை கோயில் கோபுர பார்ட்ர்களுடன், கர்நாடகத்தில் உருவான 'கசுதி' கைவேலைப்பாடு கொண்டு புடவையை அணிந்திருந்தார்.
2022 ஆம் ஆண்டில், ஒடிசாவில் தயாரிக்கப்பட்ட கஞ்சம் பகுதியைச் சேர்ந்த பழங்குடியின மக்களை மையக்கருவாகக் கொண்ட பழுப்பு மற்றும் மெரூன் நிற போம்காய் புடவை அணிந்து வந்திருந்தார்.
2021 ஆம் ஆண்டில், அவர் தெலுங்கானாவிலிருந்து வந்த சிவப்பு மற்றும் வெள்ளை நிற போச்சம்பள்ளி இக்கத் புடவையை தேர்வு செய்திருந்தார்.
அதுபோலவே, 2020 ஆம் ஆண்டில், கரோனா பேரிடர் காரணமாக நிச்சயமற்ற தன்மைக்கு இடையே, சீதாராமன் நீல நிற பார்டர்களைக் கொண்ட மஞ்சள்-தங்க பட்டுச் சேலையை அணிந்திருந்தார், இது நம்பிக்கை மற்றும் மறுமலர்ச்சியின் சின்னமாகப் பார்க்கப்பட்டது.
மேலும், 2019 ஆம் ஆண்டில், அவரது முதல் பட்ஜெடின்போதே, இந்த வரிசைப் பட்டியலின் ஆரம்பம் தனித்துக் காட்டியிருந்தது. இளஞ்சிவப்பு நிற மங்களகிரி பட்டுப் புடவை அணிந்து வந்தார்.
அப்போது, காலனித்துவ பாரம்பரியத்திலிருந்து ஒரு முறிவையும் அவர் வெளிப்படுத்தினார், அதுதான், பட்ஜெட் உரைகளை பெட்டியில் கொண்டு வராமல், சிவப்புத் துணியால் ஆன உரையில் கொண்டு வந்து அதற்கும் தனிக்கவனம் கொடுத்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.