ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: வெள்ளைப்படுதலுக்கு மாங்கொட்டை பருப்பு!

நான் ஒரு துணி எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்கிறேன். வயது 22. உடல் மெலிந்து கறுப்பாக வறட்சியாக இருக்கிறது. உடல் சூடு அதிகமாக இருப்பதால், தினமும் வெள்ளைப்படுகிறது. என் உபாதை மாற வழி என்ன? கவிதா, சென்
ஆயுள்காக்கும் ஆயுர்வேதம்: வெள்ளைப்படுதலுக்கு மாங்கொட்டை பருப்பு!
Updated on
2 min read

நான் ஒரு துணி எக்ஸ்போர்ட் கம்பெனியில் வேலை செய்கிறேன். வயது 22. உடல் மெலிந்து கறுப்பாக வறட்சியாக இருக்கிறது. உடல் சூடு அதிகமாக இருப்பதால், தினமும் வெள்ளைப்படுகிறது. என் உபாதை மாற வழி என்ன?

கவிதா, சென்னை.

சூப்பர்வைசர்களின் ஏளனப் பேச்சு, அவர்களிடம் வாங்கும் திட்டு, வேலை செய்வதால் ஏற்படும் உடல் தேய்விற்கு ஈடு தராத சூடு ஆறிப் போன டிபன் பாக்ஸ் சாப்பாடு, தகர டப்பா போன்ற ஒரு வண்டியில் ஏறிக் கொண்டு குண்டுகுழியுமான சாலையில் பயணம் செய்யும் நிலை, வீட்டில் அமைதியே இல்லாத சூழ்நிலை போன்ற பல இன்னல்களைத் தாங்கி, ஒரு சிறிய வருமானத்தில் வேலை செய்துவரும் உங்களுக்கு, உடல் சூடாவதும் வெள்ளைப்படுவதும் இயற்கையாக நிகழக் கூடியதுதான்.

* நீங்கள் காலை மாலை வெறும் வயிற்றில் ஒரு சிறிய மாங்கொட்டைப் பருப்புடன் ஓர் ஐந்து இதழ்கள் கொண்ட செம்பருத்திப் பூ சேர்த்துச் சாப்பிடவும்.

* அரிசி களைந்த நீர் கழு நீர் என்று பெயர். இதனைத் துணியால் வடிகட்டி வெளி அழுக்கு நீக்கிச் சர்க்கரை சேர்த்து உணவிற்கு முன்பாக காலை, இரவு சாப்பிட, உடற்காங்கை உடல் சூட்டினால் ஏற்படும் வெள்ளைப்படுதல், பெரும்பாடு முதலியவை தணிந்து விடும்.

* ஒரு கிளாஸ் (250-300 மிலி) தண்ணீரில் சிட்டிகை ஏலக்காய் பொடி கலந்து ஒரு நாளில் இருவேளை சாப்பிடவும்.

* வெள்ளை நிற செம்பருத்திப் பூவை உதிர்த்து 1 ஸ்பூன் நெய்யில் வறுத்து, 1 கிளாஸ் பாலுடன் கலந்து இரவில் படுக்கும் முன் அருந்தவும்.

* ஒரு டீ ஸ்பூன் தேனை, ஒரு டீ ஸ்பூன் நெல்லிக்காய்ச் சாறுடன் கலந்து, மதிய உணவிற்கு முன்பாகச் சாப்பிடவும்.

* அதுபோல 1 டீ ஸ்பூன் நெல்லிக்காய்ச் சாறுடன் ஒரு பூவன் வாழைப் பழம் சேர்த்து, ஒரு டீ ஸ்பூன் சர்க்கரை கலந்து, மாலையில் சாப்பிடவும். இதைத் தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட மிகவும் நல்லது.

* வேப்பிலைகளைத் தண்ணீரில் கொதிக்கவிட்டு ஆறவிடவும். இந்தத் தண்ணீரை வெள்ளைப்படுதல் பகுதியில் ஊற்றிக் கழுவி வர அங்குள்ள கிருமித் தொற்று நீங்கிவிடும்.

* திரிபலா சூரணத்தைத் தண்ணீருடன் கொதிக்கவிட்டு (5 கிராம் சூரணம், 1 கிளாஸ் தண்ணீர்) பாதி சுண்டியதும் ஆறவிட்டு, வடிகட்டி அதைக் கொண்டு கழுவலாம்.

* உணவில் உப்பு, புளி காரம் குறைக்கவும். மனம் அமைதியாக இருக்கும்படியான சூழ்நிலையில் வேலை செய்யவும். எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். பசி ஏற்படும் போது காலதாமதமின்றி உணவைச் சாப்பிடவும்.



* ருசி, பசி ஏற்படவும், ரத்தத்தில் உள்ள கேடு குறையவும், உடல் புஷ்டி பெறவும், வெள்ளைப்படுதல் குறையவும், அசோக மரம் மற்றும் கற்றாழையை முக்கிய மருந்தாகக் கொண்டு தயாரிக்கப்படும் அசோகாரிஷ்டம் மற்றும் குமார்யாஸவம் எனும் ஆயுர்வேத மருந்துகளை 15 மிலி கிராம் வீதம் கலந்து, மொத்தம் 30 மிலி காலை இரவு உணவிற்குப் பிறகு 21 நாட்கள் சாப்பிடவும். இதனால் நல்ல பசியும் ஏற்படும். அதன் பிறகு சதாவரீகுலம் எனும் லேகியத்தை 2 ஸ்பூன், காலை இரவு உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாக 21 நாட்கள் சாப்பிட்டு வரவும்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com