

எனக்கு வயது 74. இரவில் அதிக தடவை எழுந்து சிறுநீர் போக வேண்டியிருக்கிறது. எவ்வளவு சாப்பிட்டாலும் சாப்பிட்டது போன்ற உணர்வில்லை. சாப்பிட்ட சில விநாடிகளில் உணவு எங்கே போனதென்றே தெரியவில்லை. உடல் அதிக வேகமாக மெலிந்து கொண்டே வருகின்றது. எக்ஸ்ரே எடுத்ததில் நுரையீரல் சுருங்கிவிட்டது என்று கூறுகிறார்கள். அடிக்கடி நாவறட்சி ஏற்படுகின்றது. இவை மாற ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா?
ஆர்.ராமன், சிவகங்கை.
சிறுநீரகங்களின் வழியே வெளியேறும் சில சத்தான பகுதிகளை மறுபடியும் உறிஞ்சும் சக்தியை சிறுநீரகங்கள் பெற்றுள்ளன. அநேகமாக அவை உறிஞ்சப்படாமல் சிறுநீரின் மூலம் வெளியேறுவதாகத் தோன்றுகிறது. அதுபோலவே உணவை உள்ளே வேகமாக இழுத்துக் கொண்டு, அதன் சத்தான பகுதியை உடல் பெறாமல், சிறுநீரின் மூலம் வெளியேறுவதாலும் உடல் மெலிந்து வருவதாகவும் தென்படுகிறது. உடலுக்குத் தேவையான பிராண வாயுவை நுரையீரல் சுருக்கத்தின் மூலமாக இழப்பதன் மூலம், அணுக்களின் வளர்ச்சியும், போஷணையும் தடைபடுகிறது. அவை தம் செயல்களில் மந்தமான தன்மையை அடைவதால், உயிரோட்டமுள்ள இந்த அணுக்களின் சிதைவு, உடல் மெலிந்து போவதற்குக் காரணமாகலாம். அதனால் உங்களுடைய உடலின் மிக முக்கிய பகுதிகளான சிறுநீரகங்கள், தமனிகள், அணுக்கள் ஆகியவற்றை வலுப்படுத்தி, அவற்றின் செயல்பாட்டை மறுபடியும் சுறுசுறுப்பான நிலைக்கும், ஆரோக்கியமான தன்மைக்கும் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தமிருக்கிறது. உணவு வேகமாகச் செரிப்பதால், எளிதில் செரிக்கக் கூடிய உணவு வகைகளால் நன்மை ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை. எளிதில் செரிக்காத அதே சமயத்தில் உடல் உட்புறப் போஷணைக்கு உதவும் உணவுதான் நன்மை தரும் என்பதால், நீங்கள் காலை உணவாக, முந்திரி, பாதாம் என்ற வகையில் சிறு சிறு பாக்கெட்டுகளை வைத்து பெரிய மளிகைக் கடையில் விற்கப்படும் சத்துமாவை வாங்கி, நன்றாகப் பொடியாக்கி, கஞ்சி காய்ச்சி, தண்ணீர் கலக்காத ஏடுகளுடன் கூடிய சூடான பாலுடன் கலந்து, சர்க்கரை சேர்த்து காலை உணவாகச் சாப்பிட நல்லது.
காலையில் 10 மணிக்கு அத்திப் பழம், பாதாம் பருப்பு, அக்ரோட் பருப்பு, பிஸ்தாப் பருப்பு, சாரப் பருப்பு, பூனைக்காலி விதைப் பருப்பு, ஆப்பிள் விதை, ஏலக்காய், கல்கண்டு இவற்றை சமன் எடையாகப் பொடிக்க வேண்டியவற்றைப் பொடித்தும், அரைக்க வேண்டியவற்றை அரைத்தும், பசுவின் நெய்யில் கலந்து, அத்துடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து ஒருவாரம் ஊறிய நிலையில் உள்ளதைச் சுமார் 15 - 20 கிராம் வீதம் சாப்பிடவும். இதனால் நல்ல உடல் பலம், புஷ்டி, வீரியம் பெருகும்.
மதியம் 12 மணிக்கு இரண்டு செவ்வாழைப் பழம் அல்லது இரண்டு ரஸ்தாளி வாழைப்பழம் சாப்பிடவும். நெய்ப்புத் தன்மையும், குளிர்ச்சியும் உள்ள இவை சற்றே தாமதித்து ஜீரணமாகும் தன்மை வாய்ந்தவை. மலத்தின் அளவை அதிகரிக்கச் செய்து வெளியேற்ற உதவுவதுடன், உடலில் போஷணைக்கு வேண்டிய உணவுப் பகுதிகளை வெளியேற்றவிடாது தடுத்து நிறுத்தும் சக்தியும் வாய்ந்தவை.
மதியம் 1 மணிக்கு மாமிச சூப் வகை உணவுகளை சூடான சாதத்துடன் கலந்து சாப்பிட்டு, பஞ்சாமிர்தம் 15 - 20 கிராம் சாப்பிடவும்.
மாலை 4 மணிக்கு, பேரீச்சம்பழம் 8 -10 சுளைகள் சாப்பிடவும். உள்ளுறுப்புகளுக்கு நெய்ப்பும், போஷணைகளையும் உண்டாக்கும். உடலுக்கு வலுவும், புத்துணர்ச்சியையும் கொடுக்கக் கூடியது.
இரவு 7 மணிக்கு பாலிலிருந்து தயாராகும் பாசந்தி சாப்பிட்டு, இரவு உணவாக பாஸ்மதி அரிசியைச் சாதமாக வடித்து, புலால் வகைகளைச் சேர்க்கும் பிரியாணி சாப்பிடவும். இரவில் படுக்கும் முன் சர்க்கரை கலந்த சூடான பால் சாப்பிடவும்.
இதுபோன்ற உணவு வகைகளால் உடல் புஷ்டியாகும். நாவறட்சி நீங்கும். மெதுவாகச் செரிப்பதால் சாப்பிட்ட திருப்தி ஏற்படும். உடல் உட்புற உறுப்புகள் நன்கு வலுப்பெறும். உங்கள் உடல் உபாதை குறையும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.