

எனக்கு உதட்டின் ஓரமாக சிறிய நீர்க் கொப்புளங்கள் போன்று தோன்றி பின்னர் புண்ணாக மாறியது. மருத்துவசோதனையில் herpes simplex virus - Iவைரஸ் தொற்று உள்ளது என கூறினார்கள். இதற்கு ஆயுர்வேதத்தில் தீர்வு கூறுங்கள். மேலும் வைரஸ்களை அழிக்கும் ஆயுர்வேத மருந்துகள் உள்ளனவா? எனவும் தெரிவியுங்கள்.
-ப.ராஜ், திருவண்ணாமலை.
Herpes simplex virus உடலினுள் புகுந்த பின் நிரந்தரமாகத் தங்கி உயிர்ப்படைந்து அடிக்கடி நோயை ஏற்படுத்தும். கொப்புளங்கள் இருக்கும்போது முத்தம் கொடுப்பது மற்றும் மற்றவர்களுடனான தோல் தொடர்பு போன்றவற்றாலும், பலரும் ஒரே தட்டில் உண்ணுதல், துண்டு, துணிமணிகள், அழகு சாதனங்களைப் பகிர்ந்து கொள்வது, கைகளைச் சுத்தமாக தண்ணீரில் கழுவாமல் வைத்திருப்பது, அளவுக்கு மீறிய மன உளைச்சலுக்கு ஆளாவது, போதிய அளவு நித்திரையின்மை போன்றவற்றின் மூலம் இந்த நுண்கிருமி மற்றவர்களுக்கும் பரவக் கூடிய தன்மையையுடையது. ஹேர்ப்பிஸ் சிம்ப்லெக்ஸ் டைப் 1, ஹேர்ப்பிஸ் சிம்ப்லெக்ஸ் டைப் 2 என இருவகையான நுண்கிருமிகள் உள்ளன. இவற்றில் ஹேர்ப்பிஸ் சிம்ப்லெக்ஸ் டைப் 1 என்றழைக்கப்படும் நுண்கிருமி வாய்ப்புண்ணை உண்டாக்குகிறது. சிம்ப்லெக்ஸ் டைப் 2 நுண்கிருமி பெரும்பாலும் இன உறுப்பு சார்ந்த ஹேர்ப்பிஸூக்குப் பொறுப்பாக இருக்கிறது. ஆனால் இதுவும் வாய்புண் உண்டாகவும் காரணமாக இருக்கிறது.
பெரும்பாலும் தொற்றுநோயுள்ள ஒருவரின் உமிழ்நீர் அல்லது திறந்திருக்கும் புண்ணுடன் நெருங்கிய தொடர்பு வைக்கும்போது அவர்களும் தொற்றுநோய்க்கு உள்ளாகிறார்கள். தொற்றுநோய்க்கு ஆளானவுடன், இவ்வகை நுண்கிருமி தோலின் நரம்பு உயிரணுக்களுக்குள் செயலற்ற நிலையில் அமர்ந்திருக்கும். அளவுக்கதிகமான களைப்பு, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி, உதடு வெடிப்பு, காய்ச்சல், மன உளைச்சல், வெயில் படுதல் போன்றவற்றின் மூலமாக ஒரு கிளர்ச்சி ஏற்பட்டு செயலற்ற நிலையிலிருந்த நுண்கிருமிகள் தூண்டப்படுகின்றன. தூண்டப்பட்ட நுண்கிருமிகள் கொப்புளங்களாக மாறி வெடித்து வேதனை மிக்க புண்களாகத் தோன்றும்.
தண்ணீரில் வேப்பிலை, கடுக்காய், அருகம்புல், வெம்பாடம்பட்டை, கோரைக்கிழங்கு இவற்றை ஒரு பிடி அளவு சேர்த்து வெந்
நீராக்கி இளஞ்சூடாக ஆறியதும், துணியில் நனைத்து உதட்டுப் புண்ணின் மீது ஒத்தி எடுக்கவும். இதனால் வலி, வீக்கம், இரத்தக்கட்டு போன்றவை நீங்கக் கூடும். அதுபோல வேப்பிலை, சிற்றாமணக்கிலை, புங்க இலை, அந்தி மந்தாரை இலை, விபூதி பச்சிலை, வெற்றிலை, சமுத்திரப்பச்சை இலை இவைகளில் கிடைத்த மட்டில் ஒவ்வொன்றிலும் ஒரு பிடி இலையை சிறு துண்டுகளாக நறுக்கி இடித்துக் கஷாயமிட்டு வேக வைத்து அந்த கஷாயத்தில் நனைத்த துணியால் ஒத்தடம் கொடுக்கலாம்.
நன்னாரி வேர் (இதைத் தட்டி மேலுள்ள தோல் பகுதியை மாத்திரம் உபயோகிக்கவும்), மாகாளி கிழங்கு (இதிலும் தோல் மட்டும் போதும்), அதிமதுரம், கோரைக்கிழங்கு, சந்தனசிராய், ரோஜா மொட்டு, கருங்காலிக் கட்டையின் வைரப் பகுதி, சோம்பு, பரங்கிப்பட்டை இவை ஒன்பதையும் வகைக்கு 50 கிராம் எடுத்து பெருந்தூளாக இடித்து 15 பொட்டலங்களாக கட்டி வைத்துக் கொள்ளவும். இதில் ஏதாவது ஓரிரண்டு சரக்குகள் கிடைக்காவிட்டால் மற்றவற்றின் அளவை அதற்கு ஈடாக அதிகமாகச் சேர்த்து 450 கிராம் ஆக்கிக் கொள்ளவும். ஒரு பொட்டலத்தை அரை லிட்டர் தண்ணீரிலிட்டு 125 மி.லி. மீதமாகும்படி காய்ச்சி வடிகட்டி காலையிலும், மாலையிலும் பனங்கற்கண்டோ, குழைவு சர்க்கரையையோ சேர்த்துச் சாப்பிடலாம். HSV1 நுண்கிருமியால் இரத்தம் கெட்டு ஏற்படும் சிரங்கு, அரிப்பு, சொறி முதலியவற்றைப் போக்க மிகவும் நல்லது. தயாரித்து விற்பனை செய்யக்கூடிய திக்தகம் சோணிதாம்ருதம், நிம்பாதி, படோல கடுரோஹிண்யாதி போன்ற கஷாயங்களை உடலின் தன்மைக்கேற்ப கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிடுவதும் இந்த நுண்கிருமிகளை அழிப்பதற்கான சிறந்த ஆயுர்வேத மருந்துகளாகும். வில்வாதி எனும் மாத்திரை, நால்பாமராதி, தூர்வாதி, தினேசவல்யாதி போன்ற தைல மருந்துகளும் இந்த உபாதைக்கான சிறந்த மருந்துகளாகக் கூறலாம்.
(தொடரும்)
எஸ். சுவாமிநாதன்,
கட்டுரையாளர் : டீன் - ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை - 600 123
(பூந்தமல்லி அருகே)
செல் : 94444 41771
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.