அமைதிக்கான நோபல் பரிசு!

இரு அண்டை நாடுகளிடையே ஓயாத சண்டை. உறவில் பெரும் விரிசல். பல ஆண்டுகளாக நடந்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்த பெருமை எத்தியோப்பியா நாட்டின் அதிபரான 
அமைதிக்கான நோபல் பரிசு!
Updated on
2 min read

இரு அண்டை நாடுகளிடையே ஓயாத சண்டை. உறவில் பெரும் விரிசல். பல ஆண்டுகளாக நடந்து வந்த போரை முடிவுக்குக் கொண்டு வந்த பெருமை எத்தியோப்பியா நாட்டின் அதிபரான அபி அஹமது அலியைச் சேரும். அவருக்கு இந்த ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து நடக்கும் உள்நாட்டுப் போர்களினால் பொருளாதாரம் சல்லடையாகத் துளைக்கப்பட்டு ஏழ்மையின் பிடியில் அகப்பட்டு விழித்துக் கொண்டிருக்கும் ஆப்பிரிக்க நாடுதான் எத்தியோப்பியா.

இந்த நாட்டின் இன்னொரு சாபம், அண்டை நாடான எரித்ரியாவுடன் பல ஆண்டுகளாக எல்லை குறித்து நடக்கும் போர்கள். எப்போதும் போர் மேகங்கள் சூழ்ந்து நிற்கும் எத்தியோப்பியாவில் அரசியலில், ஆட்சியில் உள்ள நிலையற்ற தன்மை, இன்னொரு சரிவு.

மக்களை எப்போதும் பதற்றத்தில் வைக்கும் உள்நாட்டு போர்கள்... கலகங்கள்... அதனால் சொந்த நாட்டில் உடைமைகளை இழந்து அகதிகளாக நிற்கும் மக்கள். எதிர்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் சிறையில். இல்லையெனில் உயிரைக் காப்பாற்ற வெளிநாடுகளில் தஞ்சம்.

இப்படி பல பிரச்னைகளின் தீப்பிழம்பில் உழன்று கொண்டிருக்கும் சூழ்நிலையில்தான் எத்தியோப்பியாவின் பிரதமராக அபி அஹமது அலி ஏப்ரல் 2018 -இல் பதவியில் அமர்ந்தார்.

பிரதமராகப் பதவியேற்றதும் "வறுமையை ஒழிப்பேன்..' என்று சுறுசுறுப்பாகச் செயல்பட்டார். 50 சதவீத மக்கள் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்ந்து வந்த நிலையில், அலி தனது திட்டங்களால் 19 சதவீத மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர்களின் சதவீதத்தை 31 சதவீதமாகக் குறைத்துக் காட்டினார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறாக இருந்து வந்த உள்நாட்டுப் போரை நிறுத்த, குழப்பங்களை விளைவிக்கும் பல்வேறு குழுக்களைச் சேர்ந்த அரசியல் கைதிகளை பெருந்தன்மையாக விடுதலை செய்தார். எதிர்கட்சித் தலைவரை தேர்தல் ஆணையத்தின் தலைவராக்கினார். அதனால் நாட்டில் அமைதி மெல்ல காலடி எடுத்து வைத்து நுழைந்தது.

அலியின் அடுத்த லட்சியம். அண்டை நாடான எரித்ரியாவுடன் நல்லுறவு. எத்தியோப்பியா - எரித்ரியா எல்லைப் பகுதியின் விளிம்பில் உள்ளதுதான் "பாட்மி'. "அது எங்களுக்குச் சொந்தம்' என்று எரித்ரியா உரிமை பாராட்டி வருகிறது. இதற்காக கடந்த இருபது ஆண்டுகளாக நடந்து வரும் போர்களில் இரண்டு நாட்டு போர்வீரர்கள் சுமார் ஒரு லட்சம் பேர் இறந்திருக்கிறார்கள். பல்லாயிரக் கணக்கில் வீரர்கள் காயமுற்றுமுள்ளார்கள்.

இத்தனைக்கும் எரித்ரியா, எத்தியோப்பியா நாட்டிலிருந்து அவசரம் அவசரமாய் பிரிந்ததுதான். அந்த அவசரத்தில் எல்லைப் பகுதிகளைச் சரிவர பிரித்துக் கொள்ளவில்லை. அதனால் சண்டை சச்சரவு தொடர்கதையானது. கடைசியில் ஐநா தலையிட்டு "பாட்மி' பகுதி எரித்ரியா நாட்டிற்குச் சொந்தம் என்று தீர்மானித்ததாலும் எத்தியோப்பியா அதனை ஏற்கவில்லை. அதனால் எல்லைப் போர்கள் அடிக்கடி நடந்து வந்தன.

அலி வறட்டுக் கவுரவம் பாராமல் எரித்ரியாவிடம் நேசக் கரம் நீட்டினார். இரண்டு நாடுகளின் நலனுக்காக, "பாட்மி' பகுதியை எரித்ரியா சொந்தமாக்கிக்கொள்ளலாம் என்று விட்டுக் கொடுத்தார்.

"விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை' என்று சொல்வார்கள். பெருந்தன்மையாக ஒரு நிலப் பகுதியை தேச நலனுக்காக அண்டை நாட்டிற்கு விட்டுக் கொடுத்ததை சிலர் அலியின் பலவீனம் என்று தப்புக் கணக்கு போட்டாலும், நோபல் பரிசுக்கு குழு அலியைச் சரியான கோணத்தில் மதிப்பீடு செய்து நோபல் பரிசிற்காகத் தேர்ந்தெடுத்துள்ளது.

""எல்லை பிரச்னைகள், உள்நாட்டு பிரிவினைவாத கோஷங்கள் ஆட்சியாளர்களின் கவனங்களைத் திசை திருப்பும். ஆனால் பட்டினி, வறுமை, ஏழ்மையை ஒழித்து நாட்டு மக்களுக்கு உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம் , கல்வியை வழங்குவது தான் ஆட்சியாளர்களின் தலையான கடமை. அதில் எனது கவனத்தைக் குவித்து பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளேன்'' என்று சொல்லும் அலியின் முனைப்பால், எத்தியோப்பியா இப்போது 10 சதவீத பொருளாதார வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஆப்பிரிக்காவின் "வளரும் நாடுகளின் பட்டியலில்' எத்தியோப்பியா இடம் பிடித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com