

என் மகனுடைய வயது 28. வீட்டிலிருந்து கொண்டே ஐடி வேலைகளைச் செய்கிறான். பல தடவைகள் டீ போட்டுக் குடிக்கிறான். "அதிகம் குடிக்காதே' என்று சொன்னால் கேட்க மறுக்கிறான். டீயின் மருத்துவ குணங்கள் எவை? அதிகம் குடித்தால் கெடுதல் செய்யுமா?
ராமலட்சுமி, மதுரை.
"ஒரு வேளை அல்லது இரு வேளை தேநீர் அருந்து; அருந்தாதொதுக்கலும் நல்ல ஏற்பாடு' என்று பாரதிதாசன் வழியில் பாடினால் அது தற்போதைய ஆராய்ச்சி முடிவுகளுக்கு ஏற்ப அமைகிறது. ஒவ்வொரு நாளும் பல கோடி கப்கள் தேநீரை அருந்தி உலகில் மக்கள் களிப்படைகிறார்கள். நூறாண்டு வாழ்வதெப்படி என்று ஆராய்பவர்களால் ஒதுக்கப்படும் தேநீர் பானம் தரும் தேயிலைச் செடி நூறாண்டுகாலம் வாழ்கிறது.
தேயிலை பானம் விரும்பப்படுவது அதிலிருக்கும் காஃபின், துவர்ப்பு அம்சங்களுக்காகவே. அதில் மிக முக்கியமானது காஃபின். தலையின் (மூளை) திறமையால் சிறப்படையும் மனிதர்களைப் போல செடியின் தலைப்பகுதி மொட்டு இலைகளிலுள்ள 4.7 சதவிகிதம் காஃபினால் பெருமையடைகிறது, தேயிலை. நாவிற்கு சுவை தந்து மூளைக்கு இதம் தரும் தேயிலையின் குணங்களும் முதலில் தலைப் பகுதியாலேயே (மூளை) உணரப்படுகின்றன.
" உடல் குளிர்ச்சியடையும்போது தேநீர் உஷ்ணம் தரும். கவலையடையும்போது மகிழ்ச்சி தரும். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் அமைதி தரும்' என்று 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரிட்டிஷ் அரசியல் அறிஞர் வில்லியம் இவார் கிளாட்ஸ்டன் கூறியுள்ளார். நவீன கால ஆராய்ச்சியாளர்களும் தேநீர் உடலுக்கு உற்சாகம் தரும் அளவு அமைதியும் தரும் அதன் தனித்தன்மையை அங்கீகரிக்கிறார்கள். தேநீர் பருகுபவர்களுக்கு அதிக நன்மையைத் தந்து சிறிதளவே தீமை செய்கிறது.
நன்றாக வெந்த தேநீரில் இருப்பனவற்றில் தியோப்ரோமேன் தியோஃபிலின் ஆகியவை அடங்கும். இதனால் இருதயமும் மத்திய நரம்பு மண்டலமும் விழிப்படைகின்றன. துவர்ப்பு இரைப்பையின் புளிப்புச் சுரப்பைக் குறைக்கிறது.
உடல் எடையைப் பற்றிக் கவலையுள்ளவர்களுக்குத் தேநீர் தொல்லை தராத பானம். ஒரு கப் தேநீரில் நான்கு கலோரிகளே உள்ளன. முக்கியமான ஃப்ளோரைடுகளும் துவர்ப்புகளும் ஆவியாகும் வாசனைகளுடன், பி வைட்டமினும், என்ûஸம்களும் அதில் மேலும் அடங்கியுள்ளன.
தேயிலையைப் பக்குவப்படுத்தும் முறைகளில் பதப்படுத்திய முறைக்கு பிளாக் டீ என்று பெயர். பாதி பதப்படுத்திய முறைக்கு யூலாங் டீ என்றும் பதப்
படுத்தாத முறைக்கு க்ரீன் டீ என்றும் பெயராகும்.
தேநீர் நரம்புகளுக்கும், தசைகளுக்கும், மனதிற்கும் ஊக்கம் தருகிறது.
தங்கள் மகன் சற்று அளவைக் குறைத்தால் அவருடைய மனக்கவலைகள் ஏதுமிருந்தால் போக்கிவிடும். அதிலுள்ள துவர்ப்புச்சுவை வயிற்றுப் போக்கைக் கட்டுப்படுத்தும், சிறுநீரைப் பெருக்கும் செய்கை கொண்டது. சீதபேதிக்கு எல்லா வயதினருக்கும் டீ டிகாக்ஷன் தரலாம்.
பல தடவை என நீங்கள் குறிப்பிடுவது அதிக அளவாகும். அதனால் இருதய பலவீனம், வாந்தி, வாயுவினால் வயிற்றுப் பொருமல் உண்டாகும். நாடியின் வேகம் மந்தமடையும். மகனுக்கு இதை விளக்கி குடிக்கும் டீயின் அளவைக் குறைக்கச் சொல்லவும்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.