திரைக்கதிர்

நடிகர் கார்த்தியின் 22- ஆவது படம் "சர்தார்'. கரோனா தொற்று காரணமாக அவ்வப்போது தடைபட்ட இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன.
திரைக்கதிர்
Updated on
2 min read

நடிகர் கார்த்தியின் 22- ஆவது படம் "சர்தார்'. கரோனா தொற்று காரணமாக அவ்வப்போது தடைபட்ட இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளன. சமீபத்தில் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடந்து வந்தது. தற்போது இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்புகள் மைசூரில் நடந்து வருகின்றன. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும் ரஜிஷா விஜயனும் நடிக்கின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. "இரும்புத்திரை', "ஹீரோ' படங்களை இயக்கிய இயக்குநர் மித்ரன் இயக்குகிறார். ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிவி பிரகாஷ் குமார்இசையமைக்கிறார்.

---------------------------------------


விபத்தில் சிக்கி மீண்ட யாஷிகா ஆனந்த், இப்போது படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளார். சோஷியல் மீடியாவிலும் படு சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். அடிக்கடி தனது புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு ரசிகர், "படு கவர்ச்சியாக உடை அணிந்து இதுபோல் போஸ் தருகிறீர்களே, உங்களுக்கு வெட்கமாக இல்லையா?' என யாஷிகாவைக் கேட்டார். அதைப் பார்த்து கோபப்படாமல் யாஷிகா பதில் சொல்லியிருக்கிறார். "எனது தலை முடியைக் கூட காட்டி என்னால்போஸ் தர முடியும். அதுவும் உங்களுக்கு பிரச்னையாகுமா? என்னை பிடிக்காதவர்கள் பலர் இருக்கலாம். பிடித்தவர்களும் பலர் உள்ளனர். அவர்களின்ஆதரவும் அன்பும் எனக்கு போதும்' என சொல்லியிருக்கிறார் யாஷிகா.

---------------------------------------

ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிக்கும் படம் "பேட்டரி'. கதாநாயகனாக செங்குட்டுவனும், கதாநாயகியாக அம்மு அபிராமியும் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் கதை, மருத்துவ உபகரணங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை மையமாக வைத்து எழுதப்பட்டிருக்கிறது.

போலீஸ் இன்ஸ்பெக்டரான செங்குட்டுவனை அம்மு அபிராமி காதலிக்கிறார். ஒரு சந்தர்ப்பத்தில், தன்னுடைய காதலை அவரிடம் தெரிவிக்கிறார். ஆனால், ஒரு கொலை கேஸில், கொலைக்காரனை தேடிக்கொண்டிருக்கும் செங்குட்டுவன், அதன் தீவிரத்தால், அவளது காதலை ஏற்றுக் கொள்ள மறுத்து விடுகிறார். அம்மு அபிராமி தனது காதல் உணர்வுகளை பாடலாகப் பாடுகிறார்.
கவிஞர் நெல்லை ஜெயந்தா எழுதிய "நொடிக்குள் மனம் எங்கோ போகிறதே' என்கிற பாடலை, சித்தார்த் விபின் இசையமைக்க, ஜி. வி. பிரகாஷ்குமார், சக்திஸ்ரீ கோபாலன் இருவரும் பாடியிருக்கிறார்கள். மணிபாரதியின் இயக்கத்தில், கே.ஜி. வெங்கடேஷின் ஒளிப்பதிவில், தினேஷ் மாஸ்டரின் நடனப் பயிற்சியில், இந்தப் பாடல் காட்சி, குலு மணாலியில் படமாக்கப்பட்டது. மே மாதம் திரைக்கு வருகிறது.

---------------------------------------

டிஸ்னி ஹாட்ஸ்டாரின் அடுத்த பெரிய வெளியீடாக விக்ரம் பிரபு நடிப்பில் "டாணாக்காரன்' வரும் ஏப்ரல் மாதம் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது.

"டாணாக்காரன்' திரைப்படத்தின் கதைக்களம் 1998- ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகம் இதற்கு முன் பல காவல்துறை சார்ந்த திரைப்படங்களைக் கண்டுள்ளது. ஆனால் "டாணாக்காரன்' அந்த வகைப் படங்களில் தனித்துவமான, இதுவரை வெள்ளித்திரையில் ரசிகர்கள் பார்த்திராத ஓர் உலகத்தைக் காட்டும்.

அதே போல, நடிகர் விக்ரம் பிரபு இதற்கு முன் காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் இந்த கதாபாத்திரம் இதுவரை அவர் நடித்த படங்களில் ஒரு மைல்கல்லாக இருக்கும். திரைப்படத்தின் ஒவ்வொரு நடிகர், நடிகையும் தங்களது கதாபாத்திரங்களுக்காக முழு அர்ப்பணிப்போடு கடின உழைப்பைத் தந்துள்ளனர்.

படத்தின் போஸ்டர்களும் டீஸரும் ஏற்கெனவே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. படத்தின் ட்ரெய்லரும், இசையும் விரைவில் வெளியாகவுள்ளது.

---------------------------------------


பிரண்ட்ஸ் டாக்கீஸ் நிறுவனத்தின் சார்பில் சிவசலபதி, சாய் சரவணன் இணைந்து தயாரித்திருக்கும் படம் "குருமூர்த்தி'. இந்தப் படத்தை பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கே.பி.தனசேகர் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் நட்டி நடிக்கிறார். "கதம் கதம்', "கர்ணன்' படங்களுக்கு பிறகு இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவரது ஜோடியாக பூனம் பாஜ்வா நடிக்கிறார். ராம்கி, மனோபாலா, ரவிமரியா, மொட்டை ராஜேந்திரன், அஸ்மிதா, சஞ்சனா சிங், ரிஷா ஜேகப்,ரேகா சுரேஷ், சம்யுக்தா, மோகன் வைத்யா, யோகிராம், பாய்ஸ்ராஜன், மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.

""கடமை தவறாத போலீஸ் அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவரின் வாழ்க்கையில் திடீரென்று ஒரு பிரச்னை ஏற்பட்டு விடுகிறது.

அதனால் கடமை தவறாமல் பணியாற்றும் அவரது பணிக்கு சோதனை ஏற்படுகிறது குடும்பத்திலும் பிரச்னை வருகிறது. இதை எப்படி அந்தப் போலீஸ் அதிகாரி சமாளித்தார், வெற்றி பெற்றார் என்பதை விளக்கும் படமாக உருவாகி உள்ளது'' என்றார் இயக்குநர் தனசேகர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com